ஒரே ஒரு போன்கால்.. 3 வயது குழந்தையின் உயிரை காத்த சைலஜா.. கேரளாவை நெகிழ வைத்த அந்த ஆபரேஷன்!
திருவனந்தபுரம்: கேரளாவில் 3 வயது குழந்தை ஒன்றின் இதய அறுவை சிகிச்சை குழந்தையின் பெற்றோர் இல்லாமலே வெற்றிகரமாக நடந்து உள்ளது. இந்த சிகிச்சை குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகிறது.
கேரளாவின் மருத்துவ துறை.. இந்தியாவிலேயே முன்னணியில் இருக்கும் ஒரு மருத்துவ துறையாக மாறியுள்ளது. அதிலும் கொரோனா சமயத்தில் கேரளாவின் சுகாதாரதத்துறை தனது உண்மையான திறமையை உலகிற்கு காட்டியது.
அதோடு அங்கு வரிசையாக பலருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை, இதய சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு அங்கே ஹெலிகாப்டர்களை பயன்படுத்திய சம்பவம் கூட அங்கே நடந்தேறியது.
அரசு பள்ளி உருவாக்கிய ஐஏஎஸ்.. கேரளாவில் கொரோனாவை விரட்டும் தமிழர்.. அசத்தும் திருவனந்தபுரம் கலெக்டர்
அதிரடி
இந்த நிலையில்தான் கேரளாவில் 3 வயது குழந்தை ஒன்றின் இதய அறுவை சிகிச்சை குழந்தையின் பெற்றோர் இல்லாமலே வெற்றிகரமாக நடந்து உள்ளது. இந்த சிகிச்சை குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி கேரளாவை சேர்ந்தவர் பிரின்ஸ் மற்றும் ஆவணி. இவர்கள் இருவரும் உத்தர பிரதேசத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
குழந்தையின் இதயம்
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் இளைய குழந்தைக்கு பிறக்கும் போதே இதயத்தில் பிரச்சனை இருந்தது. ஆனால் இந்த பிரச்சனை பிறக்கும் போதே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சரி செய்யப்பட்டது. ஆனால் நாளடைவில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அந்த மூன்று வயது குழந்தையின் உடல் நிலை மீண்டும் மோசம் அடைந்தது.
சோதனை செய்தனர்
இதையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் உத்தர பிரதேசத்தில் இருந்ததால் அவர்கள் உடனே போன் போட்டு அழைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் கேரளாவில் கொச்சி வந்து தங்கள் 3 வயது மகளை மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு குழந்தைக்கு சோதனை செய்யப்பட்ட நிலையில் ஒரு மாதத்திற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.
திரும்பி சென்றனர்
இதையடுத்து உடனடியாக அந்த குழந்தையின் பெற்றோர் ஆவணி மற்றும் பிரின்ஸ் இருவரும் உத்தர பிரதேசம் சென்றார். ஆவணி தனது பணியில் இருந்து விடுப்பு பெறவும், பிரின்ஸ் மாற்று வாங்கி கேரளா வரவும் உத்தர பிரதேசம் சென்றனர். அவர்கள் உத்தர பிரதேசம் சென்ற போதுதான் இந்தியாவில் லாக்டவுன் போடப்பட்டது. இதனால் அவர்கள் அங்கேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
அவசர சிகிச்சை
இதையடுத்து இரண்டு மாதம் சிகிச்சை இல்லாமல் அந்த குழந்தை கஷ்டப்பட்டு உள்ளது. அந்த குழந்தையின் உடல் நிலை மோசமாகி உள்ளது. இதையடுத்து உடனடியாக அந்த மூன்று வயது சிறுமிக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர். ஆனால் அந்த குழந்தையின் பெற்றோரால் லாக்டவுன் காரணமாக கொச்சி வர முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிய அவர்களுக்கு ஒரு போன் கால்தான் உதவி உள்ளது.
சைலஜா
அதன்படி கேரளாவில் செய்தி சேனல் ஒன்றில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவிற்கு நேரலையில் ஆவணி போன் செய்துள்ளார். தனது 3 வயது மகளின் நிலைமை குறித்து பேசி இருக்கிறார். இதனால் உடனடியாக ஷைலஜா உத்தர பிரதேச அரசிடம் பேசி அவர்கள் இருவரையும் கேரளா வர வைத்தார். அதோடு அவர்கள் இருவரும் மே 29ம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டனர்.
இன்னொரு பக்கம்
இன்னொரு பக்கம் மே 22ம் தேதி அந்த குழந்தைக்கு பெற்றோர் இல்லாமலே அரசின் உதவியோடு வேகமாக சிகிச்சை செய்யப்பட்டது. பின் மீண்டும் 3 நாட்கள் கழித்து இன்னொரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தற்போது இந்த குழந்தை பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறது. அதோடு அந்த குழந்தை கடந்த ஒரு வாரம் முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. ஒரே ஒரு போன் கால் மூலம் அமைச்சர் ஷைலஜா ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.