குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி.. 14 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
திருவனந்தபுரம்: கேரளாவில் கார் மோதி பத்திரிகையாளர் பலியான சம்பவம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரியை 14 நாள் காவலில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியை சேர்ந்தவர் பஷீர் (35). இவர் சிராஜ் என்ற மலையாள பத்திரிகையில் தலைமை செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று நள்ளிரவு பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகத்தில் வந்த கார் அவரது பைக் மீது மோதியது. இதில் பஷீர் தூக்கி வீசப்பட்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த பஷீரை, மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன் என்பது தெரியவந்தது.
அதே நேரம், காயமடைந்த ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன், குடிபோதையில் இருந்தது ரத்தபரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மாஜிஸ்திரேட் அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது 14 காவலில் வைக்க உத்தரவிட்டார். எனினும், அவர் சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் மருத்துவமனையிலேயே ஐஏஎஸ் அதிகாரி தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் விபத்து நிகழ்ந்த போது ஐஏஎஸ் அதிகாரியுடன் அவரது பெண் தோழியும் உடன் இருந்ததால் அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் பெண் தோழியின் கணவர் வெளி நாட்டில் பணி புரிந்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் திருவனந்தபுரத்த்தில் உள்ள பிரபல மது பாருக்கு சென்று மது அருந்தி விட்டு வரும் போது விபத்து நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.