24 வயதில் கோடீஸ்வரர்.. கோயில் ஊழியருக்கு அடித்தது ஜாக்பாட்.. 12 கோடி பரிசு.. ஆச்சர்யம்
திருவனந்தபுரம்: கேரளாவில் கோயில் ஊழியர் ஒருவருக்கு லாட்டரியில் 12 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. அவருக்கு வருமான வரி மற்றும் கமிஷன் போக 7.50கோடி கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு நிரந்தரமாக தடை உள்ளது. ஆனால் அண்டைமாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது. கேரள அரசின் திருவோண லாட்டரி விற்பனை தற்போது நடந்து முடிந்தது. இதற்கான குழுக்கல் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடந்தது.
இதில் திருவோணம் பம்பர் பரிசு 12 கோடியை அனந்து விஜயன் (24). என்பவர் வென்றுள்ளார். இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் எர்ணாகுளத்தில் உள்ள ஏலம்குளம் கோயிலில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த ரூ.12 கோடியில் 10 சதவீத ஏஜென்சி கமிஷன் மற்றும் 30 சதவீத வருமான வரியையும் கழித்தால், அனந்து விஜயனுக்கு ரூ7.56 கோடி கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். லாட்டரியில் அடித்த ஜாக்பாட்டால் கோடீஸ்வரனாகிய அனந்து விஜயன் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்.