சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை... கேரளாவில் அமலாகிறது புதிய சட்டம்..!
திருவனந்தபுரம்: சமூக வலைதளங்களில் கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்டம் கேரளாவில் அமலுக்கு வரவுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கொண்டுவரப்பட்ட இந்த அவசரச் சட்டத்துக்கு கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான் ஒப்புதல் கொடுத்துள்ளார்.
இதன் மூலம் தனி நபரின் மரியாதை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டால் காவல்துறை நடவடிக்கை இனி பாயக்கூடும்.
அவசரச் சட்டம்
கேரள போலீஸ் சட்டப் பிரிவு 118-ல் 118 ஏ என்ற பிரிவு புதிதாக இணைக்கப்பட்டு காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் கேரளாவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதனடிப்படையில் உள்நோக்கத்துடன் சமுக வலைதளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினால், அல்லது அவதூறு தகவலை உண்மைத்தன்மை பற்றி ஆராயமல் பரப்பினால் உரிய நபர்கள் மீது இனி கைது நடவடிக்கை பாயும்.
அதிரடிச் சட்டம்
மேலும், ரூ. 10,000 அபராதமும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் செலுத்த வேண்டும். இப்படி ஒரு அதிரடியான சட்டத்தை கேரளாவில் அமல்படுத்துவதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும் இந்தச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதில் கேரள அரசு மிகுந்த முனைப்பு காட்டி வருகிறது.
5 ஆண்டு சிறை
அண்மையில் தங்ககடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா வழக்கில் சமூக வலைதளங்களில் கேரள அரசு குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் பதிவிடப்பட்டு வந்தன. இந்த சூழலில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை என்ற அவசரச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது கேரள அரசு.
அட்டூழியம்
இதனிடையே இது தொடர்பாக கருத்து பதிவு செய்துள்ள ப.சிதம்பரம், இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு இப்படி ஒரு சட்டம் இயற்றி அதை அமலுக்கு கொண்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் கேரள அரசின் அட்டூழியத்தை சீதாராம் யெச்சூரி எப்படி ஆதரிக்கிறார் எனத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.