பந்தால் நஷ்டம்.. பிஎப்ஐயிடம் ரூ.5 கோடி வாங்கி தாங்க.. கேரள ஹைகோர்ட்டில் போக்குவரத்துறை வழக்கு
திருவனந்தபுரம்: கேரளாவில் என்ஐஏ நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 23ம் தேதி நடந்த முழு அடைப்பில் மாநில போக்குவரத்துக்கு கழகத்துக்கு ரூ.5.06 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதனை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை வழங்க உத்தரவிட வேண்டும் எனக்கூறி கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரளா, தமிழகம், கர்நாடகா உள்பட இந்தியா முழுவதும் மொத்தம் 13 மாநிலங்களில் என்ஐஏ, அமலாக்கத்துறை சார்பில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அமைப்புகளின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
2 லட்சம் கேஸ்..11 வருஷ சர்வீஸ்? வாயை கொடுத்து மாட்டிக்கிட்டீங்களே! அண்ணாமலையை கலாய்த்த நெட்டிசன்கள்!
என்ஐஏ சோதனை
தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என 10 மாநிலங்களில் நடத்தப்படும் முக்கிய நடவடிக்கையில் என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் மாநில காவல்துறை இணைந்து 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது.
கேரளாவில் முழு அடைப்பு
இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உள்நோக்கத்துடன் சோதனைகள நடத்தப்பட்டுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டின. மேலும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 23ம் தேதி கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா முன்னின்று நடத்தியது.
கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு
பொதுவாக கேரளாவில் முழு அடைப்புக்கு 7 நாளுக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இந்த முழு அடைப்பு திடீரென்று நடத்தப்பட்டுள்ளது. இதனால் கேரள உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணை 29ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை மனு
இதற்கு மத்தியில் தான் கேரளா மாநில போக்குவரத்து கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதில், ‛‛கேரளாவில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக மொத்தம் 58 பஸ்கள் சேதமடைந்துள்ளன. நியை டிரைவர், கண்டக்டர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் பல இடங்களுக்கான பஸ் சேவைகள் தடைப்பட்டன. ஏற்கனவே போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது. இதனால் முழு அடைப்பு போராட்டத்தின்போது போக்குவரத்து கழகத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தொகை ரூ.5.06 கோடியை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை வழங்க உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.