கோழிக்கோடு விமான விபத்திற்கு முன்னர்.. அதே ஓடுதளத்தில் 2ஆவது முயற்சியில் வெற்றிகரமாக லேண்டான இன்டிகோ
கோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்திற்கு முன்னதாக இரண்டு மணி நேரத்திற்கு முன் தரையிறங்குவதில் இன்டிகோ விமானமும் அதே பிரச்சினையை சந்தித்து வெற்றிக்கரமாக தரையிறக்கியது தெரியவந்துள்ளது.
Recommended Video
துபாயிலிருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பயணிகளை அழைத்து கொண்டு கரிப்பூர் விமான நிலையம் வந்தது. அப்போது 10ஆவது ஓடுதளத்தில் தரையிறங்கிய நிலையில் தண்ணீர் தேங்கியிருந்ததால் 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது.
சுமார் 190 பயணிகள் பயணம் செய்த நிலையில் விமானி, துணை விமானி உள்பட 19 பேர் இறந்துவிட்டனர். மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோழிக்கோடு விமான விபத்து.. விமானியின் கவனக்குறைவே காரணம்.. போலீஸ் வழக்கு பதிவு
இரு முறை
இந்த விமானம் கனமழை காரணமாக இரு முறை தரையிறக்க முயற்சித்து முடியாத நிலையில் மூன்றாவது முறையாக தரையிறங்கிய போது விபத்திற்குள்ளானது. இதுகுறித்து தொழிலதிபரும், லண்டனில் உள்ள ராயல் ஏரோநாட்டிக்கல் சொசைட்டியின் உறுப்பினருமான அமித்சிங், தனது வலைதள பக்கத்தில் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
தரையிறங்க முயற்சி
அதில் அவர் கூறுகையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பி 737 தரையிறங்க முயற்சித்து விபத்துக்குள்ளானதற்கு 1 மணி நேரம் 45 நிமிடத்திற்கு முன்பு அதே கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஒரு இன்டிகோ ஏடி- 72 விமானம் வந்தது. அந்த விமானமும் முதல் முயற்சியில் தரையிறங்க முயன்றது.
வெற்றிக்கரம்
ஆனால் முடியவில்லை. இரண்டாவது முறை தரையிறங்க முயற்சித்த போது வெற்றிக்கரமாக தரையிறங்கியது. அதுவும் ஏர் இந்தியா இறங்கிய அதே 10ஆவது ஓடுதளத்தில்தான் இந்த விமானமும் இறங்கியது. எனவே ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.
குறைந்த அளவு பாதிப்பு
அதாவது மழையால் விமானிக்கு தெளிவான பார்வை கிடைக்காமல் இருந்திருக்கலாம். அல்லது மேகக் கூட்டங்கள் விமானம் தரையிறங்கும் போது அந்த ஓடுதளத்தை மறைத்திருக்கலாம். கடுமையான வானிலை இன்டிகோ விமானத்தை குறைந்த அளவில் பாதித்திருக்கும்.
விமான துறை
மேலும் ஏடிஆர் விமானத்திற்கு டர்போ பிராப் என்ஜின் என்பதால் போயிங் ரக என்ஜினை விட அதன் வேகம் குறைவாக இருப்பதும் விபத்திலிருந்து இன்டிகோ தப்பியதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். அமித்சிங் 25 ஆண்டுகளுக்கு மேலாக விமானத் துறையில் அனுபவம் கொண்டவர்.