அட அஜித் மாதிரியே அறிக்கை.. பாஜகவின் அழைப்பை நிராகரித்த மோகன்லால்.. லாக் ஆகாத லாலேட்டன்!
கேரளா பாஜகவில் சேர முடியாது, தனக்கு எந்த விதமான அரசியல் திட்டங்களும் இல்லை என்று கேரள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தெரிவித்து இருக்கிறார்.
திருவனந்தபுரம்: கேரள பாஜகவில் சேர முடியாது, தனக்கு எந்த விதமான அரசியல் திட்டங்களும் இல்லை என்று கேரள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தெரிவித்து இருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் தென்னிந்தியாவில் நிறைய நடிகர்களை மற்றும் பிரபலங்களை நிறுத்தும் நோக்கத்தில் இருக்கிறது பாஜக கட்சி. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் பாஜக அவ்வப்போது பேசி வருகிறது.
இந்த நிலையில் கேரளாவில் மோகன்லால் பாஜகவில் சேருவார் என்று செய்திகள் வெளியானது. அவர் பாஜகவிற்கு நெருக்கமாக இருப்பதால் இது போல செய்திகள் வந்தது.
மோடியை சந்தித்தார்
சென்ற வருடம் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. மோகன்லால் பிரதமர் மோடியை சந்தித்ததை அடுத்து அவர், பாஜகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக தொடர்ச்சியாக நிறைய செய்திகள் வெளியானது.
நிறைய கேள்விகள்
நாடாளுமன்ற தேர்தலில் மோகன்லாலை முன்னிறுத்த பாஜக முடிவெடுத்து இருப்பதாக கூறப்பட்டது. பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வந்தது. கேரளாவில் திருவனந்தபுரம் உள்ளிட்ட மோகன்லால்
விரும்பும் தொகுதி எதிலும் அவரை நிறுத்த தயார் என்று பாஜக வெளிப்படையாக நேற்று தெரிவித்து இருந்தது.
முடியாது
மோகன்லால் எங்கு கேட்கிறாரோ அங்கு அவரை நிறுத்துவோம் என்று கேரள பாஜக கூறி இருந்தது. இதற்கு மோகன்லால் ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் கேரள பாஜகவில் சேர முடியாது, தனக்கு எந்த விதமான அரசியல் திட்டங்களும் இல்லை என்று கேரள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
அடுத்த அறிக்கை
மோகன்லால் தனது அறிக்கையில் ''அரசியல் எல்லாம் கடினம். எனக்கு அரசியல் வராது. நான் நடிகன். அதுதான் என் தொழில். நான் நடிப்பதையே விரும்புகிறேன். நான் பாஜகவில் சேரும் விருப்பத்தில் இல்லை'' என்று கூறியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் எந்த கட்சியும் தன்னுடைய பெயரை அரசியல் ரீதியாக பயன்படுத்த கூடாது என்று நடிகர் அஜித்குமார், பாஜகவிற்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை விட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.