சங்கிலியை பறித்த திருடன்.. விடாமல் போராடிய பாட்டி.. விரட்டி பிடித்த போலீஸ்
Recommended Video
திருவனந்தபுரம்: என்னா ட்ரிக்ஸா ஏமாத்தறங்கப்பா... பட்டப்பகலில் அட்ரஸ் கேட்பது போல நெருங்கி பேசி பாட்டியிடம் நகையை பறித்து கொண்டு பைக்கில் பறந்திருக்கிறார் ஒரு இளைஞர். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
திருவனந்தபுரத்தில் இது நடந்துள்ளது. மியூசியம் அருகே. அது ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத தெரு. அந்த தெருவில் ஒரு 70 வயது மதிப்புடைய ஒரு பாட்டி நடந்து வந்து கொண்டிருக்கிறார்.
கொஞ்சம் வசதியான வீட்டு பாட்டி போல தெரிகிறது. பட்டுசேலை, நகைகள் என அணிந்து தனியாக நடந்து வருகிறார். கோயிலுக்கோ, அல்லது கல்யாணத்துக்கோ சென்று வந்திருக்க வேண்டும் போல தெரிகிறது.
அட்ரஸ் கேட்கிறார்
அப்போது ஒரு இளைஞர் பாட்டி அருகில் பைக்கில் வந்து நிற்கிறார். ஏரியாவுக்கு புதுசு போல ஏதோ அட்ரஸ் கேட்கிறார். நம்ம பாட்டியும் வந்தவர் மேல் பரிதாபப்பட்டு, ரொம்ப அக்கறையாக விலாவரியாக அட்ரஸை விளக்குகிறார். ஆனால் அந்த இளைஞரின் கண்களோ நம்மை யாராவது கவனிக்கிறார்களா என்றே சுற்றுமுற்றும் மேய்கிறது.
ஓடுகிறார்
பாட்டி அட்ரஸ் சொல்ல சொல்ல இளைஞர் அதை கவனிப்பதுபோலவே தெருவையும் அக்கம் பக்கம் உள்ள வீடுகளையும் நோட்டமிடுகிறார். பிறகு படக்கென பாட்டியின் கழுத்தில் கிடந்த செயினை பறித்துகொண்டு பைக்கில் கிளம்புகிறார். அதிர்ந்து போன பாட்டி பைக்கின் பின்னாடியே ஓடிப்போய் பைக்கை இழுத்து பிடிக்க முயல்கிறார்.
வீடியோ
ஆனால் இளைஞரோ பாட்டியை கீழே பிடித்து தள்ளிவிட்டு பறக்கிறார். இதில் நிலைகுலைந்து இடறி ஒரு மூலையில் போய் விழும் பாட்டி திரும்பவும் எழுந்து பைக் பின்னாடியே ஓடிக் கொண்டே இருக்கிறார். இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
மடக்கி பிடித்தார்
ஆனால் அதற்குப் பிறகு நடந்ததுதான் அதிரடி. பாட்டி திருடனை விரட்டியதை அந்தப் பக்கமாக வந்த போலீஸ்காரர் பிஜு பார்த்து விட்டார். உடனே அவர் திருடனை விரட்டியபடி சென்று மடக்கிப் பிடித்து விட்டார்.
ஓடமுடியவில்லை
திருடன் சங்கிலியைப் பறித்தபோதிலும் அந்த பாட்டி விடாமல் வீறு கொண்டு ஓடினார். ஆனாலும் தொடர்ந்து ஓட அவரால் முடியவில்லை. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.