ஃபுல் போதை.. பக்கத்தில் தோழி.. ஐஏஎஸ் அதிகாரி கார் மோதி செய்தியாளர் பலி!
ஐஏஎஸ் அதிகாரி கார் மோதியதில் செய்தியாளர் ஒருவர் உயிரிழந்தார்
திருவனந்தபுரம்: ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், புல் போதையில் காரை ஓட்டி வந்து, ஒரு செய்தியாளர் மீது பலமாக மோதிவிட்டார். இதில் அந்த செய்தியாளர் இறந்தே போய்விட்டார்.
மலையாள நாளிதழ் ஒன்றில் திருவனந்தபுரம் செய்தியாளராக பணியாற்றியவர் கே.எம். பஷீர். இவருக்கு வயசு 35. மலப்புரத்தை சேர்ந்த இவருக்கு கல்யாணம் ஆகி ஜசீலா என்ற மனைவியும், ஜன்னா, ஆஸ்மி என்ற குழந்தைகளும் இருக்கிறார்கள்.
இந்நிலையில், பஷீர், அங்குள்ள மியூசியம் ரோட்டில் பைக்கில் இன்று விடிகாலை சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே கார் வேகமாக வந்து எதிர்பாராமல் பஷீர் மீது மோதிவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே பஷீர் உயிரிழந்தார்.
காரை இப்படி ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ரமன் என்றும், அவர் அப்போது போதையில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். காருக்குள் அவருடைய தோழி வாஃபா பெரோஸ் என்பவரும் இருந்துள்ளார். இந்த விபத்தில் அதிகாரிக்கும் காயம் ஏற்பட்டது. அதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். காரை நான் ஓட்டவில்லை, தோழிதான் ஓட்டினார் என்று அதிகாரி போலீசாரிடம் சொல்கிறாராம். ஆனால் அதிகாரிதான் காரை ஓட்டி வந்து மோதினார் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.
எனினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பஷீரின் குடும்பத்தினருக்கு கேரள பத்திரிகையாளர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.