கேரள மாநில பாஜக தலைவரானார் சுரேந்திரன்... செல்வாக்கு மிக்க நபரை டிக் செய்த நட்டா
திருவனந்தபுரம்: கேரள மாநில பாஜக தலைவராக கே.சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். பல மாதங்களாக கேரள பாஜகவுக்கு தலைவர் யாரும் இல்லாத நிலையில் இப்போது இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.
கே.சுரேந்திரனை பொறுத்தவரை கட்சியிலும் சரி கட்சிக்கும் அப்பாற்பட்டும் சரி தனிப்பட்ட செல்வாக்குமிக்கவர், எதற்கும் அஞ்சாமல் தனது கருத்துக்களை ஓங்கி ஒலித்து பேசக்கூடியவர். மேலும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனின் தீவிர ஆதரவாளருகூட.
கேரள மாநில பாஜக தலைவர் பதவிக்கு பல சீனியர்கள் போட்டிபோட்ட நிலையில் சுரேந்திரனை நம்பி அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளது பாஜக தேசிய தலைமை.
மத்தியப் பிரதேசம், சிக்கிம், கேரளாவுக்கு பாஜக தலைவர்கள் இன்று நியமனம்.. தமிழகத்திற்கு எப்போது?
காலியிடம்
கேரள மாநில பாஜக தலைவராக இருந்த ஸ்ரீதரன் மிசோராம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் அங்கு சென்றுவிட்டார். அவர் வகித்து வந்த பாஜக மாநில தலைவர் பதவியிடம் காலியாகவே இருந்தது. பல மாதங்களாக பாஜகவுக்கு கேரளாவில் தலைவர் இல்லாததால் குடியுரிமைச் சட்டம் உள்ளிட்ட பல விவகாரங்களில் எல்.டி.எஃப், யு.டி.எஃப், அமைப்புகளை எதிர்கொள்வதில் நிர்வாகிகள் தடுமாறினர். கேரள பாஜகவில் இதுவரை நிலையான தலைவர் இல்லாததால் கம்யூனிஸ்ட்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு கூட பதில் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
சுறுசுறுப்பு
இந்நிலையில் பல கட்ட ஆய்வுக்கு பிறகு கே.சுரேந்திரனை கேரள பாஜக தலைவராக நியமித்துள்ளார் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா. சுரேந்திரனை பொறுத்தவரை படு சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர், போதுமான வரை தொண்டர்களிடம் அனுசரித்து செல்லக்கூடியவர். சொல்வன்மை மிக்க பேச்சாளர். கட்சிக்காக சொந்தப்பணத்தை செலவழிக்க தயங்காதவர். இப்படி பல நிறைகள் உள்ளதாலும், மத்திய இணை அமைச்சர் முரளிதரனின் பலத்த சிபாரிசு இருந்ததாலும் அவரை டிக் செய்துள்ளது பாஜக தேசியத்தலைமை.
பத்தனம்திட்டா
கோழிக்கோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட சுரேந்திரன் கடந்த மக்களவைத் தேர்தலில் பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் சொற்ப வாக்குகளில் தோல்வியை தழுவினார். இதேபோல் கொன்னி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் மஞ்சேஸ்வரம் தொகுதியில் போட்டியிட்டு சில நூறு ஓட்டுக்களில் வெற்றியை பறிகொடுத்தார். மாவட்ட எல்லைக்குள் சுருக்கிக்கொள்ளாமல் மாநிலம் தழுவிய அரசியல் செய்து வந்தவர்.
|
உறுதி
பாஜக தேசியத் தலைமை தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வண்ணம் தனது செயல்பாடுகள் இருக்கும் என்றும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் சுரேந்திரன் கூறியுள்ளார். கேரளாவில் இன்னும் ஒன்றைரை ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான முன்னேற்பாடுகளை இப்போதே செய்யத்தொடங்கிவிட்டது பாஜக தலைமை.