கோ பேக்.. எடியூரப்பா காரை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள்.. தாக்குதல்.. கேரளாவில் பரபரப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் கார் போராட்டக்காரர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. அவருக்கு கருப்புக்கொடி காட்டி இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, கர்நாடக மாநிலம், மங்களூரில் பெரும் போராட்டம் வெடித்தது. அப்போது போராட்டம் வன்முறையாக உருமாறி காவல்துறையினர் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.
இந்தநிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, மங்களூர் கலவரத்துக்கு கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்று குற்றம்சாட்டினார்.
மங்களூர் நகரம் ஓரளவுக்கு கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. எனவே கணிசமான மலையாளிகள் அங்கு வாழ்கிறார்கள். கேரளாவில் குடியுரிமை சட்ட திருத்தம் அமல்படுத்தப்படாது, என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்தை மேற்கு வங்கம் போலவே தீவிரமாக எதிர்க்கக் கூடிய ஒரு மாநிலம் கேரளா. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் கர்நாடக உள்துறை அமைச்சர், இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கர்நாடக உள்துறை அமைச்சரின் பேட்டி, கேரள ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இந்த நிலையில்தான், கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது குடும்பத்துடன் கேரள மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு தரிசனம் செய்ய சென்றிருந்தார்.
"It is wrong to blame all Keralites for ill actions of a few. Such incidents in God's own country brings disrepute to Kerala," says @CMofKarnataka in response to anti-CAA_NRC protestors blocking his convey & shouting "Go back" slogans.
— Anusha Ravi Sood (@anusharavi10) December 24, 2019
Vid- Janam TV. https://t.co/BzQCgLLyvm pic.twitter.com/YMjG0434Hb
நேற்று அவர் திருவனந்தபுரம், பத்மநாபசுவாமி கோவிலுக்கு தரிசனத்திற்கு, சென்றபோது, தகவலறிந்து கூடிய, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அவரது பாதுகாப்பு காரை சூழ்ந்து கொண்டு, கோ பேக் என, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். கருப்பு கொடி காட்டினர். சில விஷமிகள் எடியூரப்பா கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேரள போலீசார், மேற்கொண்டு அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுத்து, எடியூரப்பாவை, பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.
இன்று கன்னூர் நகரத்திலும், எடியூரப்பா வாகனத்திற்கு இதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. அங்கும் இளைஞர் காங்கிரஸ்காரர்கள் இப்படி ஒரு போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில் நடைபெற்ற கலவரத்திற்கு மலையாளிகள் காரணம் என்று, அந்த மாநில உள்துறை அமைச்சர் ஒரு கருத்து தெரிவித்திருந்த நிலையில் எடியூரப்பாவுக்கு இதுபோன்ற இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்று கேரள உளவுத்துறை எப்படி எச்சரிக்காமல் சென்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள எடியூரப்பா, ஒரு சிலரின் தவறான செயல்களால் ஒட்டுமொத்த கேரள மாநில மக்களையும், குற்றம் சொல்வது சரி கிடையாது. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் கடவுளின் பூமி என்று அழைக்கப்படும் கேரளாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தராது என்று கூறியுள்ளார்.