கேரள இடைத்தேர்தல்.. காங்கிரஸுக்கு 3.. இடதுசாரிகளுக்கு 2.. ஒரு தொகுதியில் பாஜகவுக்கு 2வது இடம்!
Recommended Video
திருவனந்தபுரம்: கேரள சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. ஆளும் இடதுசாரி கூட்டணி இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. பாஜக ஒரு தொகுதியில் மட்டும் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
கேரளாவில் 5 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. அரூர், மஞ்சேஷ்வர், கொன்னி, எர்ணாகுளம் மற்றும் வட்டியூர்காவு ஆகிய தொகுதிகளே அவை.
இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி முன்னணியில் உள்ளது.
ஹரியானா: ஜாட்- தலித்துகள் வாக்குகளை அலேக்காக அறுவடை செய்த காங்., துஷ்யந்தின் ஜேஜேபி!
இடதுசாரி
2 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கூட்டணியான இடதுசாரி கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மஞ்சேஷ்வர் தொகுதியில் மட்டும் பாஜகவுக்கு 2வது இடம் கிடைத்தது. ஆளும் இடதுசாரி கூட்டணி வட்டியூர்காவு மற்றும் கொன்னி தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதேசமயம், எர்ணாகுளம்,மஞ்சேஷ்வர் மற்றும் அரூர் தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது.
சிபிஎம்
இதில் அரூர் தொகுதி தற்போது சிபிஎம் வசமிருந்த தொகுதியாகும். அதை காங்கிரஸ் கைப்பற்றுவது கம்யூனிஸ்ட் கட்சியினரை அதிர வைத்துள்ளது. வட்டியூர்காவில் சிபிஎம் வேட்பாளர் வி.கே.பிரஷாந்த், அரூரில் காங்கிரஸ் வேட்பாளர் சனிமோல் உஸ்மான், மஞ்சேஷ்வரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் கமருதீன், எர்ணாகுளத்தில் காங்கிரஸ் கட்சியின் டிஜே வினோத், கொன்னி தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் ஜனீஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
2-வது இடம்
பாஜகவைப் பொறுத்தவரை கேரள சட்டசபைத் தேர்தலில் அவர்களுக்கு சந்தோஷப்பட எதுவும் இல்லை. வட்டியூர்காவு, கொன்னி, மஞ்சேஷ்வர் தொகுதிகளில் பாஜக சிறப்பான வாக்குகளை வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மஞ்சேஷ்வரில் மட்டும் அக்கட்சிக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. மற்ற தொகுதிகளில் சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை.
கட்டாயம்
2021ல் கேரள சட்டசபைக்கு பொதுத் தேர்தல் வரவுள்ளது. எனவே இந்தத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு கட்சிகள் பொதுத் தேர்தலுக்குத் தயாராக இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, இடதுசாரிகளும், பாஜகவும் தங்கள் அஸ்திவாரங்களை சரி செய்து கொண்டு மேலே எழுந்து வருவது கட்டாயமாகி உள்ளது.