திரிபுரா பாணியில்... கிறிஸ்தவர்களை அரவணைத்த பாஜக... கேரளாவில் வலுவாக காலூன்றுமா ?
திருவனந்தபுரம்: திரிபுரா பாணியில் கிறிஸ்தவர்களை அரவணைத்து கொண்டிருக்கிறது பாஜக. இதற்காகவே 8 கிறிஸ்தவ வேட்பாளர்களையும் களத்தில் இறக்கியது. பாஜகவின் இந்த வியூகம் கை கொடுத்தால் கேரளாவில் அக்கட்சி வலுவாக காலூன்றுவதை தவிர்க்க முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
1980களில் இந்துத்துவா சிந்தனையோ அரசியல் கட்சியாக உருவெடுத்தது பாஜக. வாஜ்பாய், அத்வானி காலம் வரை ஒருவிதமாக அணுகுமுறையும் மோடி- அமித்ஷாவின் இப்போதைய காலத்தில் வேறான அணுகுமுறையையும் அந்த கட்சி பின்பற்றுகிறது.
குறிப்பாக 2014 லோக்சபா தேர்தலில் வென்ற பின்னர் பாஜகவின் கண்களுக்கு ஆட்சி அதிகாரம் மட்டுமே இலக்காக இருந்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராக இருந்தபோதும் அங்கேயும் சில பல சித்து வேலைகளால் பாஜகவின் காவிக் கொடி பறந்து கொண்டிருக்கிறது.
கேரளா கிறிஸ்தவர்கள்
தென்னகத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, புதுச்சேரிதான் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாகவும் இருக்கிறது. இதில் கேரளாவை பொறுத்தவரையில் 2014 லோக்சபா தேர்தல் முதலே கிறிஸ்தவர்கள் பாஜகவுடன் நல்லுறவை பேணுவதில் கவனமாக இருந்தனர். இதில் பாஜகவும் தீவிரமாக காய்களை நகர்த்தியது. கேரளா கிறிஸ்தவர்கள் பிரச்சனை எனில் பிரதமர் மோடியே நேரடியாக தலையிட்டு பேசுகிறார்.
ஒற்றுமைக்கு இடையூறு
குறிப்பாக லவ் ஜிகாத் விவகாரம்தான் கேரளாவில் முஸ்லிம்- கிறிஸ்தவர் என்கிற சிறுபான்மையினர் ஒற்றுமைக்கு இடையூறாக இருக்கிறது. இதே காரணம்தான் கிறிஸ்தவர்களை பாஜகவை நோக்கி நகர்த்தியும் இருக்கிறது. கேரளாவைப் பொறுத்தவரை லவ் ஜிகாத் என்பதற்கு எதிராக லேசான குரலை வெளிப்படுத்தினாலே போதும்... அவர்களை கூர்மைப்படுத்தி பாஜக அல்லேக்காக தூக்கிச் சென்றுவிடுகிறது.
தேவாலயங்கள் பஞ்சாயத்து
அத்துடன் கேரளாவின் தேவாலயங்களில் இருக்கும் இயல்பான பிரிவினை, அத்தனை தரப்பையும் பாஜகவின் தயவை நாட சொல்கிறது. குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த தேவாலயங்களைச் சேர்ந்தவர்கள், பாஜகவை நோக்கி கேரளா நிர்வாகிகளை தள்ளிவிடுவதிலும் படுமுனைப்பாகவே செயல்படுகின்றனர். குறிப்பாக மலங்கரா, யாக்கோபிய திருச்சபை மோதல்களில் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் மன்மோகன் வைத்யா பஞ்சாயத்து பேசியது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகவே பார்க்க வேண்டும். அதேபோல் சைரோ மலபார் கத்தோலிக்க தேவாலய மேஜர் ஆர்ச்பிஷப் கார்டினல் ஜார்ஜ் அலென்சேரியை கர்நாடகா துணை முதல்வர் அஸ்வத்நாராயண் சந்தித்து பேசினார்.
பாஜகவின் உதவிக்காக..
மேலும் இடதுசாரி அரசாங்கத்தில் சிறுபான்மையினருக்கான உதவிகள் பெரும்பாலும் முஸ்லிம்களுக்கே சென்றடைகிறது என்கிற குற்றச்சாட்டையும் கிறிஸ்தவ தேவாலய நிர்வாகிகள் முன்வைக்கின்றனர். மத்தியில் அதிகாரத்தில் பாஜக இருப்பதால், அதிகார மோதல்களில் சிக்கிக் கொண்ட கேரளா தேவாலயங்கள் இயல்பாகவே பாஜகவின் உதவியை நாடுவதும் நம்பிக் கொண்டிருப்பதும் தவிர்க்கவும் முடியாத ஒன்று.
பாஜகவின் கிறிஸ்தவ வேட்பாளர்கள்
இப்படி கிறிஸ்தவ தேவாலயங்களின் நம்பிக்கையை பெற்றுவிட்டோம் என்ற அடிப்படையில்தான் இந்த முறை 8 கிறிஸ்தவர்களை வேட்பாளர்களாக களமிறக்கி இருக்கிறது பாஜக. அதேபோல் காங்கிரஸ் கூட்டணிக்கு போவார் என எதிர்பார்க்கப்பட்ட பிசி ஜார்ஜையும் கூட பாஜக வளைத்துப் போட்டிருக்கிறது. பாஜகவின் தேசிய இளைஞரணி செயலாளராக அனூப் ஆண்டனி ஜோசப் நியமிக்கப்பட்டார். இப்போது அவரும் தேர்தல் களத்தில் போட்டியிட்டுள்ளார். ஆலப்புழாவில் தேவாலயம் இடிக்கப்படுவதை பிரதமர் மோடி வரை கொண்டு சென்று தடுத்து நிறுத்திய பாலாசங்கர், செங்கனூர் பாஜக வேட்பாளர். அவருக்கு தேவாலய நிர்வாகிகள் பலரும் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காங். வாக்கு வங்கிக்கு வேட்டு
கேரளாவைப் பொறுத்தவரையில் மொத்த சிறுபான்மை வாக்காளர்கள் 48%. இதில் கிறிஸ்தவர்களைவிட முஸ்லிம்களே அதிகம். பொதுவாக கேரளாவில் கிறிஸ்தவர்கள் வாக்குகள் காங்கிரஸுக்கும் முஸ்லிம்கள் வாக்குகள் இடதுசாரிகளுக்கும் கிடைக்கும். இப்போது காங்கிரஸுக்கு செல்லக் கூடிய கிறிஸ்தவர்கள் வாக்குகளை மடைமாற்றி தன்வயப்படுத்திக் கொண்டிருக்கிறது பாஜக. இதனால் திரிபுராவைப் போல காங்கிரஸை ஓரம்கட்டி எப்படியாவது கேரளாவில் காலூன்றி விடுவோம் என்கிற பெரும் நம்பிக்கையில் இருக்கிறது பாஜக.