கேரளா சட்டசபை தேர்தல்: பாஜகவில் இணைகிறார் தேசத்தின் 'மெட்ரோ மேன்' ஶ்ரீதரன்
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் 'மெட்ரோ மேன்' என புகழப்படும் ஶ்ரீதரன் இணைய உள்ளார்.
1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ல் தனுஷ்கோடி எனும் தமிழ்நாட்டு எல்லையாக இருந்த சிறுநகரத்தை பெரும் புயலால் எழுந்த ஆழிப்பேரலை மூழ்கடித்தது. அதேநாளில் பாம்பன் ரயில் ஒன்றும் ஆழிப்பேரலையால் கவிழ்க்கப்பட்டு 2,000 பேர் மாண்டுபோயினர்.
அன்று அழிந்த தனுஷ்கோடி இன்னமும் உயிர்பெறவில்லை. இன்றளவும் கைவிடப்பட்ட சூனிய பிரதேசமாகவே காட்சி தருகிறது தனுஷ்கோடி. ஆனால் அன்று சிதைந்து சின்னாபின்னமாக பாம்பன் ரயில் பாதை இப்போதும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
பாம்பன் ரயில் பாதையின் கம்பீரமான சீரமைப்புக்கு காரணமான அதிகாரி ஶ்ரீதரன். 1964-ல் 3 மாத காலத்தில் பாம்பன் பாலத்தை சீரமைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் 46 நாட்களில் தன்னுடைய குழுவினருடன் இந்த பாம்பன் பாலத்தை சீரமைத்து காட்டியது ஶ்ரீதரன் தலைமையிலான குழு.
நாட்டின் முதலாவது மெட்ரோ ரயில் திட்டமான கொல்கத்தா மெட்ரோ திட்டத்தை வடிவமைத்தவரும் ஶ்ரீதரன்தான். கொங்கண் ரயில் பாதை திட்டம், டெல்லி மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றையும் சிறப்பாக செயல்படுத்தியவர் ஶ்ரீதரன். இதனால்தான் நாட்டின் மெட்ரோ மேன் என்ற புகழுக்குரியவரானார். இவரது பணியை பாராட்டி மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கியிருக்கிறது.
தற்போது 88 வயதாகும் கேரளாவை சேர்ந்த மெட்ரோ மேன் ஶ்ரீதரன், சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளார். கேரளாவில் சட்டசபை தேர்தலுக்காக விஜய் யாத்திரையை பிப்ரவரி 21-ந் தேதி முதல் மார்ச் முதல் வாரம் வரை பாஜக நடத்த உள்ளது.
இந்த விஜய் யாத்திரையின் போது பாஜகவில் தாம் இணைய இருப்பதாக ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக விரும்பினால் தாம் சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் தயார் என்றும் எதிர்க்கட்சிகள் கண்ணை மூடிக் கொண்டு விமர்சிக்கும் போக்கு உடன்பாடானது அல்ல எனவும் ஶ்ரீதரன் கூறியுள்ளார்.