யார் நீ.. ஆதார் அட்டையை காட்டு.. மேற்கு வங்க இளைஞருக்கு பளார் அறை.. கேரள ஆட்டோ டிரைவரின் அராஜகம்!
மேற்கு வங்க இளைஞரை தாக்கியுள்ளார் கேரள ஆட்டோ டிரைவர்
திருவனந்தபுரம்: "நீ யார்.. எங்கிருந்து வர்றே.. இங்கே என்ன வேலை.. உன் ஆதார் அட்டையை காட்டு" என மேற்கு வங்க இளைஞரை மிரட்டியதுடன்.. அவரது கன்னத்தில் அறைந்து தாக்கி உள்ளார் கேரள ஆட்டோக்காரர் ஒருவர்.. இது சம்பந்தமான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது முக்கோலா என்ற பகுதி.. இங்கு ஆட்டோ ஓட்டி வருபவர் சுரேஷ். இந்நிலையில், இன்று காலை தன்னுடைய ஆட்டோவை ரிவர்ஸ் எடுக்க முயன்றுள்ளார் சுரேஷ்.
அப்போது சாலையில் ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார்.. அவர் பெயர் கவுதம் மாண்டால்.. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்.. அவர் மீது அந்த ஆட்டோ தெரியாமல் மோதியுள்ளது.
இதனால் சுரேஷை பார்த்து இளைஞர் கவுதம் முறைத்து பார்த்துள்ளார்.. இது சம்பந்தமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.. அப்போது கவுதமிடம் சுரேஷ் ஆதார் அட்டையை காண்பிக்க சொல்லியதுடன், பளார் என அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துவிடுகிறார்.. இது சம்பந்தமான ஒரு வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் பரபரப்பும், நெருக்கடியும் மிகுந்த சாலையாக காணப்படுகிறது.. அங்கு கௌதம் மாண்டால் நின்று கொண்டிருக்கிறார்.. அவரிடம் கோபமாக சென்ற ஆட்டோ டிரைவர் சுரேஷ், "நீ யார்.. எங்கிருந்து வர்றே.. இங்கே என்ன வேலை.. உன் ஆதார் அட்டையை காட்டு"என மிரட்டுகிறார்.
அதற்கு இளைஞரோ, "முதல்ல உங்க ஆதார் அட்டையை காட்டுங்க" என்று சொல்கிறார்.. இதை கேட்டதும் கோபமாக அங்கிருந்து சுரேஷ் நகர்ந்து செல்கிறார்.. சற்று தூரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தன்னுடைய ஆட்டோவில் இருந்து ஆதார் அட்டையை எடுத்து வந்து இளைஞரிடம் காட்டுகிறார்.
இதை பார்த்ததும் கவுதமும், தன் பர்ஸில் இருந்து ஆதார் அட்டையை தேடுகிறார்... அவர் அட்டையை எடுப்பதற்குள் சுரேஷ் இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார்... "எங்கே உன் ஆதார் கார்டு?" என்று கேட்டுக் கொண்டே திரும்பவும் கவுதமை தாக்குகிறார்... உடனே கவுதம் ஆதார் அட்டையை வேகவேகமாக எடுத்து சுரேஷிடம் காட்டவும், அதை அவர் பறித்து கொண்டு சென்றுவிடுகிறார்.
மேற்கு வங்க இளைஞரை சுரேஷ் மிரட்டுவதையும், கன்னத்தில் அறைவதையும், அவரது ஆதார் கார்டை எடுத்து கொண்டு செல்வதையும் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தபடி நிற்கிறார்கள்.. இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிடவும் வைரலாகி வருகிறது.. இதையடுத்து ஆட்டோ டிரைவர் சுரேஷை போலீசார் கைது செய்தனர். கவுதமை கன்னத்தில் அறையும்போது, ஆட்டோ டிரைவர் சுரேஷ் குடித்திருந்ததாக கூறப்படுகிறது.