கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்!
திருவனந்தபுரம்: கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60-க்கு கொண்டு வருவோம் என்று அந்த மாநில பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் கூறியுள்ளார்.
தற்போது ஆட்சியில் இருக்கும் இடது முன்னணி அரசு ஏன் பெட்ரோ, டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவில்லை? என்று கும்மணம் ராஜசேகரன் கேள்வி எழுப்பினார்.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர பாஜக மூத்த தலைவர்கள் சிலர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், கும்மணம் ராஜசேகரன் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களை வாட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சதத்தை கடந்து செல்கிறது. இது போதாதென்று சமையல் கியாஸ் விலையும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள், இல்லத்தரசிகள் என அனைவரையும் வாட்டி வருகிறது. மேற்கு வங்கம், புதுச்சேரி, மேகாலயா மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன.
பாஜகதான் காரணம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜகதான் காரணம் என்று குற்றம்சாட்டும் பலரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளனர். நிலைமை இப்படியிருக்க கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60-க்கு கொண்டு வருவோம் என்று அந்த மாநில பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் கூறியுள்ளார்.
பெட்ரோல் விலை ரூ.60 ஆக குறைப்போம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை ரூ.60க்குக் குறைப்போம். மக்கள் தங்களை தேர்ந்தெடுத்தால் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து ரூ.60 ஆகக் குறைப்போம். தற்போது ஆட்சியில் இருக்கும் இடது முன்னணி அரசு ஏன் பெட்ரோ, டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவில்லை?
ஏன் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவில்லை
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இருக்கின்றன, ஆனால் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதை எது தடுக்கிறது? நாங்கள் கணக்கிட்டுப் பார்த்தோம் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலை கொண்டு வந்தால் விலை ரூ.60 தான் வரும் என்று கும்மணம் ராஜசேகரன் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர பாஜக மூத்த தலைவர்கள் சிலர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜக தலைவர் ஒருவரே அதனை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் என்ன? என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.