கேரளா: பாஜகவின் ரூ3.5 கோடி ஹவாலா பணம் கொள்ளை- 22பேர் குற்றவாளிகள்- 625 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
திருவனந்தபுரம்: சட்டசபை தேர்தலுக்காக கேரளாவுக்கு பாஜகவினர் கொண்டு வந்த ரூ3.5 கோடி ஹவலா பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 625 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 22 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். கேரளா பாஜக தலைவர் சுரேந்திரன், அவரது மகன் தர்மராஜன் ஆகியோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கேரளா சட்டசபை தேர்தலின் போது நிலப் பதிவுக்காக கொண்டு செல்லப்பட்ட ரூ25 லட்சம் திருச்சூர்-கொடக்கர நெடுஞ்சாலையில் கொள்ளையடிக்கப்பட்டதாக முதலில் ஒரு புகார் போலீசில் தரப்பட்டது. பின்னர் கோழிக்கோடு நகரில் இருந்து கொச்சி செல்லும் வழியில் மேலும் கொடக்கர மேம்பாலத்தில் ரூ25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக மற்றொரு புகார் போலீசில் தரப்பட்டது.
இந்த புகார்களை கொடுத்தவர்களின் பின்னனியை ஆராய்ந்த போலீசார் பாஜகவினர் தொடர்பு இருப்பதாக கண்டுபிடித்தனர். அடுத்தடுத்து கொடக்கர பகுதியை மையமாக வைத்து பணம் பறிப்பு புகார்கள் வந்தது குறித்து சந்தேகம் எழ தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் தான் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு பாஜகவினர் தேர்தல் செலவுக்காக கொண்டு வந்த மொத்தம் ரூ3.5 கோடி பணம் கொடக்கர நெடுஞ்சாலையில் கொள்ளையடிக்கப்பட்டது அம்பலமானது.
ரூ.20,000 கோடியில்'மத்திய விஸ்டா' திட்டம்..நேருக்கு நேர் கேள்வி கேட்ட டி.ஆர்.பாலு..மிரண்டுபோன பாஜக!
கொள்ளையில் பாஜகவினர் பெயர்கள்
அத்துடன் இந்த பணம் ஹவாலா முறையில் கேரளாவுக்குள் கொண்டுவரப்பட்டது என்பதையும் போலீசார் கண்டுபிடித்துடன். மேலும் இக்கொள்ளை சம்பவத்தில் பல பாஜக பிரமுகர்களின் பெயர்களும் அடிபட கேரளாவில் அரசியல் புயலை கிளப்பியது. இடதுசாரிகளும் காங்கிரஸும், சட்டசபை தேர்தல் செலவுக்கு பாஜக கறுப்பு பணத்தை இறக்கியது எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
பாஜக தலைவர் சுரேந்திரன்
இவ்வழக்கில் கேரளா பாஜக தலைவர் சுரேந்திரன், அவரது மகன் தர்மராஜன் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தியது. இதனடிப்படையில் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞலகுடா நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 625 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் 22 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாஜக தலைவர் சுரேந்திரன், அவரது மகன் தர்மராஜன் ஆகியோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுரேந்திரன் மகன்கள்- ஹவாலா பணம்
இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: கடந்த மார்ச் 6-ந் தேதியன்று கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு மொத்தம் ரூ4.6 கோடி ஹவாலா பணம் கொண்டுவரப்பட்டது. இந்த ரூ4.6 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் சுரேந்திரனின் மகன்கள் தர்மராஜன், தனராஜன் ஆகியோர் மார்ச் 1 முதல் மார்ச் 26-ந் தேதி வரை கர்நாடகாவில் இருந்து மொத்தம் ரூ17 கோடி ஹவாலா பணத்தை கேரளா சட்டசபை தேர்தல் செலவுகளுக்காக கொண்டு வந்தனர்.
பாஜகவினருக்கு ஹவாலா பணம்
மேலும் ரூ23 கோடி ஹவாலா பணம் மார்ச் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 5-ந் தேதி வரை கேரளாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இப்படி சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஹவாலா பணத்தில் கொடக்கர அருகே ரூ3.5 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப் பிரிவு, வருமானப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க வேண்டியதுள்ளது. பாஜக தலைவர்களுக்குதான் இந்த பணம் கொடுக்கப்பட்டது என்பதற்கு சுரேந்திரனின் மகன் தர்மராஜனின் தொலைபேசி பேச்சு விவரங்கள் சாட்சியாக உள்ளன.
குற்றவாளிகள் 22 பேர்
இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக முகம்மது அலி சேர்க்கப்பட்டுள்ளார். மொத்த 22 பேர் இந்த ஹவாலா பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.