பட்ஜெட் புக்கில் போடும் போட்டோவா இது.. கொதிக்கும் பாஜக.. கூலாக கேரள அரசு
Recommended Video
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் புத்தகத்தின் மேல் உறை பகுதியில், மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசக் இன்று தனது ஐந்தாவது பட்ஜெட்டை, கேரள சட்டசபையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் புத்தகத்தை வாங்கி பார்த்த எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு ஷாக் காத்திருந்தது.
பட்ஜெட்டின் அட்டைப் பக்கத்தில் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதை சித்தரித்து படம் இடம் பெற்றிருந்தது.
ஓவியம்
ஆதரவாளர்கள் காந்தியைச் சூழ்ந்துகொண்டு அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அழுவதை போலவும், காந்தி உடல் புல்லட் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை போலவும் படம் சித்தரித்தது. இது ஒரு மலையாள கலைஞரின் ஓவியம் என்று கூறிய தாமஸ், "மகாத்மா கொலை செய்யப்பட்டார் என்பதையும், ஆளும் கட்சியும் மத்திய அரசும் இன்று போற்றக்கூடிய இந்து வகுப்புவாதிகளால் கொலை செய்யப்பட்டார் என்பதும் எங்களுக்கு நினைவிருக்கிறது" 'என்றார்.
ராகுல் காந்தி
அண்மையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மகாத்மாவை கொன்ற கொலையாளி நாதுராம் கோட்சே மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஒரே சித்தாந்தத்தை நம்புகிறார்கள் என்று கூறினார். டெல்லியில் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மக்கள் துப்பாக்கிச் சூடு நடத்த வழிவகுக்கும் வகையில் பாஜக நிர்வாகிகள் கருத்து தெரிவிப்பதன் மூலம் கோட்சேவின் சித்தாந்தத்தை பாஜக உயிரோடு வைத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
காங்கிரசும் அதிருப்தி
இதனிடையே, இந்த படத்திற்கு, காங்கிரஸ் கூட கண்டனம் தெரிவித்துள்ளது. நாங்களும் பாஜக, ஆர்எஸ்எஸ்சை எதிர்ப்பவர்கள்தான். ஆனால் பட்ஜெட் உரை இடம் பெறும் புத்தகத்தில் இப்படி படம் இடம் பெற்றிருக்க தேவையில்லை, எதிர்ப்பை காட்ட வேறு இடங்கள் எத்தனையோ இருக்கிறது, என்கிறார் காங்கிரசை சேர்ந்தவரான எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா.
பாஜக எதிர்ப்பு
ஆனால் பாஜகவோ, கேரள பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதால், அதை இப்படியான போட்டோக்கள் மூலம் சர்ச்சையை ஏற்படுத்தி மறைக்க இடதுசாரிகள் அரசு முயல்கிறது என்று குற்றம்சாட்டுகிறது. ஆனால், காந்தி கொலையை மறைக்க முடியாது என்பதால், இந்த படம் அவசியம்தான் என்று ஐசக் உறுதியாக கூறுகிறார். முதல்வர் பினராயி விஜயனும், அமைச்சரின் செயலில் தவறில்லை என கூறியுள்ளார்.