ஆஹாடா.. அச்சாடா.. ஒரே ஒரு வேட்பாளர்.. ஓகோன்னு 240 வழக்கு !
திருவனந்தபுரம்: கேரளாவில் 240 வழக்குகளை எதிர்கொள்ளும் ஒருவரை பாஜக தனது வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
கேரளாவில் பாஜக பத்தனம் திட்டா மக்களவை தொகுதிக்கு சுரேந்திரன் என்பவரை வேட்பாளாராக அறிவித்துள்ளது. இவர் மீது கேரளாவில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
68 வழக்குகள் கொல்லம் மாவட்டத்திலும், பத்தனம்திட்டாவில் 30 வழக்குகளும், 56 வழக்குகள் ஆலப்புழாவிலும், காசரகோடில் 33 வழக்குகளும், 3 வழக்குகள் திருவனந்தபுரத்திலும், இடுக்கியில் 17 வழக்குகளும், 13 வழக்குகள் எர்ணாகுளத்திலும், கோட்டயத்தில் 8 வழக்குகளும், 6 வழக்குகள் திரிசூரிலும், கோழிக்கோட்டில் 2 வழக்குகளும், மலப்புரம், வயநாடு மற்றும் கன்னூர் மாவட்டங்களில் தலா ஒரு வழக்கும் சுரேந்திரன் மீது பதியப்பட்டுள்ளது. இதில் கொல்லம் மாவத்த்தில்தான் அதிகபட்சமாக 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொலை முயற்சி, வன்முறையைத் தூண்டுதல், வெறுப்பூட்டும் விதமான பேச்சுகள், பொதுச்சொத்துகளை நாசமாக்கியது, கலவரங்கள் ஏற்படுத்தியது, வீடு தகர்ப்பு, தடை உத்தரவை மீறியது, தீவைப்பு, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, அச்சுறுத்தல், வழிபாட்டுத் தலங்களை தகர்த்தது, பொதுப் போக்குவரத்தை சீர்குலைத்தது என்பது உட்பட பல்வேறு பிரிவுகளில் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
570 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்.. இவர்களில் எத்தனை பேர் எம்பியாகப் போறாங்களோ!
இந்த நிலையில் இவர் பத்தனம் திட்டா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தன்மீது 60 வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் கேரள அரசு இவர் மீது 240 வழக்குகள் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனால் வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்ததால் இவரது வேட்புமனு தள்ளுபடி ஆகும் நிலை ஏற்பட்டது. இதனால் சுரேந்திரன் தனது வேட்புமனுவை மீண்டும் திருத்தம் செய்து தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள வழக்குகள் குறித்த விவரங்களை நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று கூறியது. இதனால் சுரேந்திரன் தன்மீதான வழக்கு விவரங்களை ஒரு நாளிதழில் விளம்பரம் செய்துள்ளார். இந்த வழக்கு விவரங்களை வெளியிட மட்டுமே 4 பக்கங்கள் பிடித்துள்ளது.
இவர் மீது பதிவு செய்யப்பட வழக்குகளில் பெரும்பாலான வழக்குகள் சபரிமலை தொடர்பான வழக்குகள். இந்த நிலையில் இவருக்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 75 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய அனுமதி உண்டு. இப்போது இந்த விளம்பரங்களுக்கு மட்டும் 60 லட்சம் வரை செலவு பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இவர் மீது எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கும் பட்சத்தில் இவர் மீதான பிடி இறுகும். 240 வழக்கு சுரேந்திரன் என்றே இவரை பலரும் கூப்பிடுகிறார்களாம். சிறப்பு!