சபரிமலை வன்முறைக்கு காரணமே சங்பரிவார் தான்.. ஆளுநரிடம் அறிக்கை கொடுத்த பினராயி விஜயன்
திருவனந்தபுரம்:சபரிமலை வன்முறைச் சம்பவங்களில் சங்பரிவர் அமைப்பைச் சேர்ந்த 9,489 பேருக்கு தொடர்பு இருப்பதாக ஆளுநர் சதாசிவத்திடம் முதல்வர் பினராயி விஜயன் அறிக்கையை அளித்துள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்தும் முயற்சியில் மாநில அரசு இறங்கி வருகிறது. ஆனால், அரசின் நடவடிக்கைகளை தடுக்கும் விதத்தில் போராட்ட காரர்களும் தீவிரமாக பனிப்போர் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்வதற்காக இளம்பெண்கள், 50 வயதிற்கு குறைந்த பெண்கள் முயன்று திரும்பி சென்றனர்.
ஜன.14ல் மகரஜோதி
இந்நிலையில் வரும் ஜனவரி 14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது, அதையொட்டி, கடந்த டிசம்பர் 30ம் நாள் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது. அப்போது, கடந்த ஜனவரி 2ம் தேதி கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்கள் சபரிமலை கோவிலில் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
அறிக்கை அளிக்க வேண்டும்
அந்த சம்பவத்தை அடுத்து, கேரளா முழுவதும் போராட்டங்கள் வலுக்க தொடங்கியுள்ளது. மாநிலத்தில் நிலவும் வன்முறை குறித்தும், வன்முறையை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அம்மாநில ஆளுநர் சதாசிவம் அறிக்கை கோரியிருந்தார்.
அறிக்கை தந்த முதல்வர்
இந்நநிலையில், சபரிமலை வன்முறை குறித்து பினராயி விஜயன் அரசு அறிக்கை அளித்துள்ளது. தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "சபரிமலையில் ஏற்பட்ட வன்முறை,கலவரம் தொடர்பாக 2,012 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது.
சங்பரிவாருக்கு தொடர்பு
பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் 10,561 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில், 9,489 பேர் சங்பரிவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள்" என குறிப்பிட்டப்பட்டுள்ளது.
தாக்குதல் எப்படி?
மேலும் இந்த அறிக்கையில், திட்டமிட்டு எப்படி தாக்குதல் நடைபெற்றது என்றும் பெண் பக்தர்கள், ஊடகவியலாளர்கள், காவல்துறையினர் மீது எப்படி தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.