சவால்களை சமாளிக்க அம்மா கற்றுக்கொடுத்தார்... கேரள முதல்வர் பினராயி விஜயன் நெகிழ்ச்சி
திருவனந்தபுரம்: வாழ்க்கையில் வரும் சிரமங்களையும், சவால்களையும் சமாளிக்கும் திறமையை தனது அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இன்று உலக அன்னையர் தினம் கடைபிடிக்கப்படுவதால் தனது அம்மா கல்யாணி பற்றிய சில நினைவுகளை பினராயி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், எல்லா தாய்மார்களையும் போலவே தனது தாயும் தனக்கு ஊக்கமளித்ததாகவும், அவர் கற்றுக்கொடுத்த பாடம் தான் தனது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்து கொடுத்ததாகவும் நினைவு கூர்ந்துள்ளார்.
சில பிரச்சனைகள் காரணமாக தங்கள் குடும்பத்தின் பொறுப்பை அம்மா ஏற்க வேண்டியிருந்ததாகவும், அந்த பொறுப்பை துணிச்சலாக நிறைவேற்றிக்காட்டினார் எனவும் பினராயி பெருமிதம் தெரிவித்துள்ளார். தன்னுடன் பிறந்த 14 பேரில் தாம் தான் இளையபிள்ளை என்றும், இதனால் சிரமங்களை கையாள்வதை அம்மாவை பார்த்து கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.
மேலும், நெருக்கடிகளை சந்திக்கும் தருணங்களில் எல்லாம் அதை கடக்க வேண்டும் என்ற அசாதாரண ஆற்றலையும் அவரிடம் இருந்து தெரிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். இன்று அன்னையர் தினம் என்பதால் தனது அம்மாவை நன்றியுடன் தாம் நினைவு கூர்வதாகவும், தனது வாழ்க்கைக்கு மதிப்புமிக்க பாடங்களை கற்றுக்கொடுத்தது தனது அம்மா தான் எனவும் பினராயி விஜயன் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் ஜூன் 9 வரை லாக்டவுன் நீட்டிப்பு- பிரதமர் மொஹிதீன் யாசின்
தாய்மையின் தியாகம், கருணை, துணிச்சல், ஆகியவற்றை அரவணைத்துக் கொள்வதன் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறுவோம் என்றும், அனைத்து தாய்மார்களுக்கும் வாழ்த்தும், நன்றியும் எனவும் தெரிவித்துள்ளார்.