மலப்புரம் கலெக்டருக்கு கொரோனா.. கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார்
தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார் கேரள முதல்வர்
திருவனந்தபுரம்: யார் கண்ணு பட்டுதோ... கேரளாவுக்கே நேரம் சரியில்லை.. அடுத்தடுத்த சோகங்களில் சிக்கி தவித்து வருகிறது அம்மாநிலம்.. இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயன் இன்று தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அவர் மட்டுமல்லாமல் சில அமைச்சர்களும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
தொற்று பாதிப்பில் இருந்து ஜனவரி மாதம் முதலே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த மாநிலம் கேரளா.. நம் நாட்டிற்கு மட்டுமல்லாமல் பிற நாடுகளுக்கும் கேரளாவின் தடுப்பு நடவடிக்கைகள் ஒரு முன்மாதிரியாக இருந்தன.
ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை.. சமீப நாட்களாக தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 1,564 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது... இதுதான் உச்சபட்ச அதிக பாதிப்பு எண்ணிக்கையாகும்.
இந்த சமயத்தில்தான், மூணாறு சோகம் நடந்தது.. நிலச்சரிவில் 71 பேர் அநியாயமாக இறந்துபோய்விட்டனர்.. மண்ணுக்குள் புதைந்துபோனவர்களின் சடலம் கிடைக்காமல் இன்னும் தேடி வருகிறார்கள்..
கொரோனா ஒரு பக்கம் தாளித்து எடுக்கும் நிலையில், டெங்கு, எலிக்காய்ச்சலும் பரவுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார். இந்த நிலையில் கோழிக்கோடு விமான நிலைய விபத்தின்போது மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு வந்த மலப்புரம் கலெக்டருக்கும், அதிகாரிகள் 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் தினமும் 10,000 முதல் 20,000 பேருக்கு தொற்று ஏற்படலாம்.. அமைச்சர் கேகே சைலஜா ஷாக் தகவல்
முதல்வர் பினராயி விஜயன் கோழிக்கோடு விபத்து இடத்திற்கு நேரில் சென்றபோது கலெக்டரும் உடன் இருந்தார் என்பதால் தற்போது முதல்வர் விஜயன் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் மட்டுமல்லாமல் முதல்வருடன் தினசரி பணி நிமித்தம் தொடர்பு கொண்டுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா, வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன், அமைச்சர்கள் ஜலீல், ஜெயராஜன், ஏசி. மொய்தீன், விஎஸ் சுனில் குமார், கடனபள்ளி ராமச்சந்திரன், சபாநாகர் ஸ்ரீராமகிருஷ்ணன், டிஜிபி லோக்நாத் பெஹரா ஆகியோரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.