முல்லைப்பெரியாறிலிருந்து அதிகபட்ச நீரை உடனே திறந்து விடுங்கள்.. முதல்வர் ஸ்டாலினுக்கு பினராயி கடிதம்
திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறில் இருந்து அதிகபட்ச தண்ணீரை கால்வாய் வழியாக உடனடியாக வைகை அணைக்கு திறந்து விட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் கடந்த வாரம் பெய்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 40 பேர் வரை பலியானார்கள். அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியவில்லை. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பத்தனம்திட்டா, கோட்டயம் எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு , இடுக்கி, திருச்சூர், பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
இந்த மாவட்டங்களில் இன்னும் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக தமிழ்நாடு கேரளா எல்லையில் இருக்கும் முல்லைப்பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது.
137 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை - கம்பம் பள்ளத்தாக்கு நெல் சாகுபடிக்காக இன்று திறப்பு
அணை
முல்லைப்பெரியாறு அணையில் கோர்ட் உத்தரவின்படி 142 அடி வரை தண்ணீர் சேகரிக்க முடியும். அதன்பின் வடிகால் வழியாக வைகை அணைக்கு நீர் திறந்து விடப்படும். அங்கு பெய்து வரும் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணைக்கு நிகர நீர்வரத்து வினாடிக்கு 2,109 கன அடியாக உள்ளது. தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டு பக்கம் வினாடிக்கு 1,750 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ஆனால்
ஆனால் தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் நீர் வரத்து குறையாமல் இருப்பதால் தொடர்ந்து அணையின் நீர் மட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி கேரளாவில் அணையின் நீர் மட்டும் 137.10 அடியாக உள்ளது. இன்னும் நான்கரை அடி வர மட்டுமே அதிகபட்சம் நீரை சேகரிக்க முடியும். தற்போது வரும் நீர் வரத்து காரணமாக விரைவில் 142 அடியை அணை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோரிக்கை
இந்த நிலையில்தான், தமிழ்நாடு அரசு துரிதமாக செயல்பட்டு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீரை திறந்து விட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்துள்ளார். முல்லைப்பெரியாறு அணையில் நீர் வேகமாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தால் கேரளா எல்லையோர கிராமங்களில் வெள்ளம் ஏற்படும்.
வெளியேற்ற வேண்டும்
இதனால் தமிழ்நாட்டில் உள்ள வைகை ஆற்றுக்கு கால்வாய் வழியாக படிப்படியாக தண்ணீரை திறந்துவிட வேண்டும். இதில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும். அதிகாரிகளுக்கு உடனே உத்தரவு பிறப்பித்து கால்வாய் வழியாக நீர் வெளியேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கேரளாவில் தொடர்ந்து மழை பெய்வதால் இந்த அணை நிரம்பி வருகிறது.
தண்ணீர் திறப்பு
கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படும் முன் கேரளா அரசுக்கு அது தொடர்பாக தமிழ்நாடு அரசு முன்பே அறிவிப்பும் வெளியிட வேண்டும். 24 மணி நேரத்திற்கு முன்பே எங்களுக்கு தகவல் தெரிவிக்கும்பட்சத்தில் எல்லையோர கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு நாங்கள் உரிய எச்சரிக்கைகளை விடுக்க முடியும். உடனடியாக அதிகபட்ச தண்ணீரை கால்வாய் வழியாக வைகை அணைக்கு திறந்து விட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.