தமிழில் டிவிட் செய்த "சேரன்" விஜயன்.. கஜாவிற்கு கரம் கொடுத்த கேரளா.. குவியும் பாராட்டு!
கஜா புயல் நிவாரணம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் டிவிட் செய்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
திருவனந்தபுரம்: கஜா புயல் நிவாரணம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் டிவிட் செய்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இரண்டு வாரம் முன் வீசிய கொடூர கஜா புயலால் தமிழகம் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. மிக முக்கியமாக டெல்டா மாவட்ட மக்கள் பேரிழப்பை சந்தித்து இருக்கிறார்கள்.
கஜா புயல் சேதத்தில் தமிழகத்திற்கு உதவ கேரளா அரசு கரம் கொடுத்து இருக்கிறது. தமிழகத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.
தமிழில் டிவிட்
தமிழகத்திற்கு உதவ முன்வந்து இருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் டிவிட் செய்துள்ளார் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. அவரது டிவிட்டர் டைம்லைன் முழுக்க தமிழ் டிவிட்டுகளால் நிரம்பி வழிகிறது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
|
தமிழ் சகோதரர்கள்
அவர் தனது டிவிட்டில், கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழக சகோதரர்களுக்கு கேரள மக்களின் ஆதரவை தெரிவிக்கறோம். புதன் கிழமை அமைச்சரவை அவசர உதவியாக 10 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வழங்க முடிவு கொண்டோம். உணவு, துணி, ஆடைகள் உட்பட்ட 14 லாரி அவசர பொருட்கள் ஏற்கனவே அனுப்பி வைத்தோம்.
|
மருத்துவ குழு
ஆறு மருத்துவ குழுவும் கேரளா மின்சார வாரியத்தை சேர்ந்த 72 ஊழியர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தேவை என்றால் மேலும் உதவியை அனுப்புவோம் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவாதம் அளித்தோம், என்று கூறியுள்ளார்.
அட சூப்பர்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழக முதல்வர் கூட கேரளாவிற்கு உதவிய போது மலையாளத்தில் டிவிட் செய்யவில்லை. ஆனால் கேரளா முதல்வர் தமிழ் மொழியில் டிவிட் செய்து இருக்கிறார். அதே சமயம் இவரது தமிழில் கொஞ்சம் மலையாள வாசமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கேரளா வெள்ளத்தின் போது தமிழர்களின் உதவியை மறக்காது கைமாறு செய்து இருப்பதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.