அடடா.. என்னமா பேசியிருக்கார் பாருங்க..! மோடியை புகழந்த கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்!
திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் மூத்த தலைவரான அப்துல்லா குட்டி பிரதமர் மோடியை புகழ்ந்து பேஸ்புக்கில் பதிவிட்ட கருத்து அக்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நாட்டின் 17வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 351 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி நாளை நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்கிறார். இந்நிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் பாஜகவின் பக்கம் தாவும் முடிவுக்கு வந்துள்ளனர்.
காங். அதிரடி.அசோக் கெலாட், கமல்நாத்துக்கு கல்தா- சச்சின், சிந்தியாவுக்கு முதல்வர் வாய்ப்பு?
கர்நாடக எம்எல்ஏ
ஏற்கனவே கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ரோஷன் பெய்க் பாஜகவுக்கு ஆதரவாக பேசினார். மேலும் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்தார். இதுதொடர்பாக கட்சி மேலிடம் விளக்கம் கேட்டு ரோஷன் பெய்க்கிற்கு நோட்டீஸ் அனுப்பியது.
மோடிக்கு புகழாரம்
இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவும் அக்கட்சியின் மூத்த தலைவருமான அப்துல்லா குட்டி மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், அரசியல் விமர்சகர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் சார்பை ஒதுக்கி, நாடாளுமன்ற தேர்தல்களில் பா.ஜ.க.வின் முக்கிய வெற்றிக்குப் பின்னணியில் உள்ள காரணங்களை மதிப்பிடுவதில் பாரபட்சமற்றவர்களாக இருக்க வேண்டும்.
காந்திய கொள்கைகள்
இந்த வெற்றி நரேந்திர மோடி அரசின் ஆளுமை உத்திகள் மற்றும் வளர்ச்சி திட்டத்திற்கான வெகுமதி ஆகும். மோடி இவ்வளவு பிரபலமாக ஒரு சுவாரசியமான காரணம் உள்ளது, அது மோடி தனது ஆட்சியில் காந்திய கொள்கைகளை பின்பற்றியதுதான்.
மோடி செய்திருக்கிறார்
மேலும் மகாத்மா காந்தி ஒருமுறை தனது ஆதரவாளர்களிடம், 'நீங்கள் ஒரு கொள்கையை உருவாக்கும்போது, வாழ்க்கையில் சந்தித்த மிகவும் ஏழ்மையான நபரின் முகத்தை நினைத்துப் பாருங்கள், என்று கூறினார். அதைத்தான் மோடி செய்துள்ளது.
தூய்மை இந்தியா
தூய்மை இந்தியா திட்டம் மூலம் 9.26 கோடி மக்களுக்கு இலவச கழிப்பறைகளை கட்டிக்கொடுத்துள்ளார். 6 கோடி குடும்பங்களுக்கு எல்பிஜி சமையல் எரிவாயு சேவை வழங்கியுள்ளார்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
பிரதமர் மோடி கொண்டுவந்த புல்லட் ரயில், ஸ்மார்ட் சிட்டிஸ் போன்ற திட்டங்களை மக்களும் எதிர்க்கட்சியினரும் புறக்கணிக்கக்கூடாது. இவ்வாறு அப்துல்லா குட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அப்துல்லா குட்டியின் கருத்துக்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் அதிர்ச்சி
நோட்டீஸ் விவகாரம் தொடர்பாக பேசிய அப்துல்லா குட்டி, எனது கருத்தில் என்ன தவறு? நான் உள்ளதை தானே பேசினேன், கட்சி எதற்கு இதற்கு விளக்கம் கேட்கிறது என எனக்கு புரியவில்லை என கூறியுள்ளார். கேரள காங்கிரஸின் மூத்த தலைவரான அப்துல்லா குட்டியின் இந்த பேச்சு அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.