கேரளாவில் இன்று ஜன.14-ல் பொங்கல் விடுமுறை - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் தமிழர்கள் வாழும் 6 மாவட்டங்களில் இன்று ஜன.14-ல் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் கேரளா மக்களின் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கேரளாவிலும் ஜனவரி 14-ந் தேதி தமிழர்கள் வாழும் 6 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு வந்தது.
விடிஞ்சா பொங்கல்... இரவிலும் களத்தில் இறங்கிய முதல்வர்.. சாலைகளை சீரமைக்கும் பணிகளை அதிரடி ஆய்வு!

ஜன.15-ல் விடுமுறை என அறிவிப்பு
ஆனால் நடப்பாண்டில் ஜனவரி 15-ந் தேதி அரசு விடுமுறை என கேரளா அரசு அறிவித்தது. இதனால் குழப்பம் ஏற்பட்டது. மேலும் இதனை மாற்றி அறிவிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளா தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தை முதல் நாள் பொங்கல்
கேரளா தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் பேச்சி முத்து இது தொடர்பாக கூறுகையில், தை மாதம் முதல் தேதிதான் பொங்கல். ஆனால் தை 2-ந் தேதி பொங்கல் விடுமுறை என கேரளா அரசு அறிவித்திருக்கிறது. இதனால் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்கள் விவரத்தை கேரளா அரசுக்கும் அனுப்பி உள்ளோம் என்றார்.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இது தொடர்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமும் அனுப்பி இருந்தார். அக்கடித விவரம்: தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் நாளினை பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14ஆம் தேதி, புனிதமான தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்; ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15ஆம் நாளினை இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா அரசு மாற்றி அறிவிப்பு
ஆகவே, தமிழ்ச் சமூகங்களிடையே, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14 ஆம் இன்றுஅறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். கேரளா அரசு இதனை உடனடியாக ஏற்று தமிழர்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களில் இன்று ஜனவரி 14-ந் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.