கேரள மருத்துவருக்கு கொரோனா.... ஓமிக்ரான் தொற்றுள்ளதா என ஆய்வு
திருவனந்தபுரம் : இங்கிலாந்தில் இருந்து கேரளா வந்த மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில், அவருக்கு ஓமிக்ரான் உள்ளதா என கண்டறிய மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கோழிக்கோட்டை சேர்ந்த மருத்துவர் நவம்பர் 21ம் தேதி வந்த நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது நவம்பர் 28ல் கண்டறியப்பட்டது.
கடந்த சில தினங்களாக மருத்துவர் சென்ற இடங்களை வரைபடமாக வெளியிடவும் கோழிக்கோடு மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
உருமாறிய கொரோனா
தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனாவான ஓமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், ஜப்பான், இஸ்ரேல் போன்ற நாடுகள் வெளிநாட்டினருக்குத் தடை விதித்து தங்கள் நாட்டு எல்லைகளை மூடிவிட்டன. இந்த உருமாறிய கொரோனாவான ஓமிக்ரான் கவலைக்குரிய கொரோனா வகையாக உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது. இதனால் பல நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனாலும் ஓமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்தியாவிலும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் கர்நாடகாவிலும் இரண்டு பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கேரள மருத்துவருக்கு ஓமிக்ரான்?
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த இங்கிலாந்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் 21ம் தேதி இங்கிலாந்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு வந்தடைந்தார். அப்போது அவருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அப்போது அறிகுறி ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நவம்பர் 28ம் தேதி மருத்துவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது மாதிரிகள் ஓமிக்ரான் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
மருத்துவர் சென்ற இடம் கண்காணிப்பு
இதற்கிடையே கோழிக்கோடு சென்றபின் மருத்துவர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு தரப்பினரை சந்தித்து உள்ளார். தற்போது அவர் சென்ற இடங்களை ஆய்வு செய்யும் மாவட்ட மருத்துவ நிர்வாகம் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலையும் தயாரித்து வருகிறது. மேலும் மருத்துவர் சென்ற இடங்களின் வரைபடத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.
Recommended Video
மாவட்ட மருத்துவ அதிகாரி தகவல்
மேலும் மருத்துவர் குறித்த விவரங்களை தெரிவித்த கோழிக்கோடு மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் உம்மர் ஃபரூக், மருத்துவரின் தாய்க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், ஒருவேளை அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானால் அவருடைய மாதிரியும் ஓமிக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்படும் என தெரிவித்தார்.