"டிஎஸ்பி தற்கொலை, கடவுள் கொடுத்த தீர்ப்பு"..உண்ணாவிரதத்தை கைவிட்ட எலக்ட்ரீசியன் மனைவி கண்ணீர் பேட்டி
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரையில் காரை நிறுத்தியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரை கார் முன்பு தள்ளி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட டிஎஸ்பி ஹரிகுமார் தற்கொலை செய்து கொண்டார்.
நெய்யாற்றின்கரையின் டிஎஸ்பியாக இருந்தவர் ஹரிகுமார். இவர் தனது வீட்டிலிருந்து கடந்த 5-ஆம் தேதி வீட்டிலிருந்து காரை வெளியே எடுக்க முயற்சித்தார்.
அப்போது வீட்டின் வாசலின் முன்பு டிஎஸ்பியின் காரை எடுப்பதற்கு இடையூறாக நெய்யாற்றின்கரை காவுவிளையைச் சேர்ந்த சனல் (32) என்பவரது கார் நின்றிருந்தது. இதனால் டிஎஸ்பி, சனலுடன் பிரச்சினை செய்தார்.
வேகமாக வந்த கார்
அப்போது இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த டிஎஸ்பி, சனலை பிடித்து சாலையில் தள்ளியுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் சனல் மீது மோதியதில் அவர் பலியாகிவிட்டார்.
கைது
இதையடுத்து அப்பகுதியிலிருந்து டிஎஸ்பி ஹரிகுமார் தப்பி சென்றார். பின்னர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் டிஎஸ்பிக்கு சிம்கார்டு வாங்கிக் கொடுத்த குமரி மாவட்டம் திற்பரப்பை சேர்ந்த சதீஷ் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில்
கொலைக்கு பிறகு டிஎஸ்பி தப்புவதற்காக கார் ஏற்பாடு செய்து கொடுத்த அனூப்பையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் சாலையில் கார் வேகமாக வருவதை பார்த்த பிறகே சனலை டிஎஸ்பி தள்ளிவிட்டதாக குற்றப்பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் பதிவு செய்திருந்தனர்.
உண்ணாவிரதம்
இதனிடையே ஹரிகுமாரை கைது செய்யக் கோரி சனலின் மனைவி விஜி இன்று காலை உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதையடுத்து டிஎஸ்பி ஹரிகுமார் கல்லம்பலத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ் விசாரணை
இதையறிந்த சனலின் மனைவி இது கடவுள் வழங்கிய தீர்ப்பு என கூறி உண்ணாவிரதத்தை கைவிட்டார். டிஎஸ்பி தற்கொலை சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.