நன்றிக் கடன்... கஜா புயல் பாதித்த பகுதியில் சேவையாற்ற வந்த கேரள மின்வாரிய ஊழியர்கள்!
Recommended Video
திருவனந்தபுரம்: கேளரா முதல்வர் பினராயி விஜயன் உத்தரவின் பேரில் கேரளா மின்வாரிய ஊழியர்கள் தமிழகம் வந்துள்ளனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்ம்கள் சின்னாபின்னமாகின. இதனால், மின் இணைப்பு இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும், மக்களின் ஒத்துழைப்புடன் சீரமைப்பு பணிகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.
இந்தநிலையில், கேளரா முதல்வர் பினராயி விஜயன் உத்தரவின் பேரில் கேரளா மின்வாரிய ஊழியர்கள் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியை தொடங்கி உள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட நகரங்களில் இன்னும் ஓரிரு நாட்களில் மின் இணைப்பு சரிசெய்யப்படும் என்றும், கிராமபுறங்களில் முழு மின் இணைப்புக்கு ஒரு வார காலம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. அதே நேரம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், மின் இணைப்புகளை சரிசெய்யவும் தமிழகத்தில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மத்திய குழு விரைவில் வரும்.. பிரதமர் நிவாரணம் அளிப்பாரென நம்புகிறேன்.. முதல்வர் பழனிச்சாமி பேட்டி
தமிழகத்தில் இருந்து ஏராளமானோர், கேரளா மழை வெள்ளத்திற்கு நிவாரண நிதியாக பணம் மற்றும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்து, ஆறுதலாக இருந்தனர். இந்தநிலையில், புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு, நன்றி கடன் மறவாமல், உதவிகரம் நீட்டுவதற்காக
கேரளாவில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
25,000 பேர் தேவை:
இதற்கிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த 1 லட்சம் மின்கம்பங்களை மாற்ற கூடுதலாக 25 ஆயிரம் ஊழியர்கள் தேவைப்படுகிறது தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் நடைபெற்ற அமைப்பின் மதிப்பீட்டு அலுவலர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் தலைவர் எஸ்.எஸ். சுப்பிரமணியன், பொதுச் செயலர் எஸ். ராஜேந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கஜா புயலால் தமிழகத்தில் 7 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு நிலைமை சீராக ஒரு மாதத்துக்கும் மேலாகும் என்ற நிலையில், மின்இணைப்பு வழங்குவதற்காக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. சரிந்து விழுந்துள்ள ஆயிரக்கணக்கான மின்கம்பங்களும் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
4,300 கி.மீ. தொலைவுக்குத் தாழ்வழுத்த மின்கம்பிகளும், 1,300 கி.மீ. தொலைவுக்கு உயரழுத்த மின்கம்பிகளும் சரிந்து விழுந்துள்ளன. இவைத்தவிர 840 மின்மாற்றிகள் சேதமடைந்துவிட்டன. வர்தா புயல் பாதிப்பைவிட 3 மடங்கு அதிகம் சேதமாகியுள்ளது. வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து 5 ஆயிரம் மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வயல் பகுதியில் ஒரு மின் கம்பத்தில் நடுவதற்கு 16 பேர் தேவை என முதல்வரே கூறுகிறார். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்களை மாற்ற வேண்டுமெனில் கூடுதலாக 25 ஆயிரம் ஊழியர்கள் வேண்டும். பணிகளை ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டுமெனில் மின்கம்பங்கள் விழுந்த பகுதிகளுக்கு செல்ல சாலைகளில் தடையாக உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதற்கென தனியாக 5 ஆயிரம் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
புயல் பாதித்த பகுதிகளில் மின்வாரிய ஊழியர்களுக்கு தனி முகாம்களை அமைத்து, தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். சீரமைப்புப் பணிகளுக்கு பயன்படுத்தும் ஒப்பந்தப் பணியாளர்களை காலியாகவுள்ள 16 ஆயிரம் களப்பணியாளர் இடங்களில் நிரந்தரப் பணியாக நிரப்ப வேண்டும்.
சீரமைப்புப் பணியின்போது இதுவரை 2 ஊழியர்கள் உயிரிழந்துவிட்டனர். 3 பேர் காயமடைந்துள்ளனர். சீரமைப்பு பணியில் உயிரிழக்கும் பணியாளர்களுக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். வாரிசுகளில் ஒருவருக்கு நிபந்தனையின்றி அரசு வேலை வழங்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் உள்ள ஒப்பந்தப் பணியாளர்கள் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தயாராகவுள்ளனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் உரிய உத்தரவாதம் அளித்து அனுப்புவதற்கு தயக்கம் காட்டி வருகிறது. மின்வாரியம் உரிய உத்தரவுகளை வழங்கி புனரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்தினால் மட்டுமே 7 மாவட்டங்களிலும் கிராமங்களுக்கு மின்சாரம் சாத்தியமாகும் என்றனர்.