எழில் கொஞ்சும் தென்மலை எக்கோ சுற்றுலாத்தலம்… சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் தென்மலையில் உள்ள எக்கோ சுற்றுலாத்தலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
கோடை சீசன் துவங்குவதற்கு முன்பே கூட்டம் வரத் தொடங்கி உள்ளது. இங்கு பல்வேறு சூழல்களையும் கருத்தில் கொண்டு தென்மலை நீர்த்தேக்கத்தில் 3 இயந்திர படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
18 இருக்கைகள் கொண்ட 2 படகுகள் , 7 பேர் அமரக்கூடிய ஒரு படகும் உள்ளன. இவற்றிற்கு 1 மணி நேரத்திற்கு 270 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மலையேற்ற பயிற்சி
இங்கு வரும் பார்வையாளர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையிலும், மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும் சில நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதில், மலையேற்ற பயிற்சியும் அடங்கும். இந்த நிகழ்வுக்கான அதிகாரபூர்வமான துவக்க விழா, கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. புதியதாக தொடங்கபட உள்ள பரிசல் சவாரிக்கு ஒரு நபருக்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயம்.
உயிர்காக்கும் கவசம்
3 கிலோ மீட்டர் வரை பரிசல் மூலம் பயணம் செய்யலாம். பரிசல்களில் உயிர்காக்கும் கவசங்கள் அளிக்கப்பட்டு உள்ளன. ஒரு பரிசலுக்கு 4 பேர் வீதம் அதிகபட்சம் 40 பார்வையாளர்கள் இந்த வசதியை ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மூங்கில் படகு
இதேபோன்று, மூங்கில் படகு ஒன்றும் புதியதாக இயக்கப்பட உள்ளன. இதில் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. இந்த மூங்கில் படகில் 12 பேர் பயணிக்கலாம். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக பத்து முறை சவாரி செய்யலாம். இதற்கான சவாரி கட்டணமாக ஒரு நபருக்கு 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூங்கில் குடில்கள்
களம் கண்டு தீவுப்பகுதியில் மூங்கில் குடில்கள் கட்டமைக்கப்படுகிறது. இது தென்மலை சந்திப்பில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த வசதியை தங்கி செல்லும் பார்வையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
24 மணி நேரத்திற்கு மட்டும் 2 நபர்களுக்கு முன் பணமாக 7,500 ரூபாய் கட்ட வேண்டும். இதற்கான போக்குவரத்து ஜீப் மூலமாகவும், படகின் மூலமாகவும் அமையும்.
பறவை காட்சி
பறவை காட்சி மற்றும் மலையேற்ற பயிற்சி என்பது சூழலியல் சுற்றுலா அம்சமாக திகழ்கிறது. பறவைகளை பார்ப்பதற்கு அவர்களுக்கு பைனாகுலர்கள், கையடக்க புத்தகங்கள், பறவைகள் குறித்த தகவல்கள் உள்ளன. செங்கோட்டை - திருவனந்தபுரம் சாலையில் இருந்து இப்பகுதிக்கு செல்லலாம். ஒரு நபருக்கு 200 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.