இன்னோவா காருக்கு 30 மாதங்களில் 34 டயர்களா...! ஷாக் கொடுத்த கேரள அமைச்சர்
திருவனந்தபுரம்: கேரள மின் துறை அமைச்சர் மாணி தனது இன்னோவா காருக்கு கடந்த 30 மாதங்களில் 34 டயர்களை அரசுப் பணத்தில் மாற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் மாணிக்கு கேரள அரசு சார்பில் 2017-ம் ஆண்டு மாடல் இன்னோவா கிரிஸ்டா வாகனம் பயன்பாட்டுக்கு தரப்பட்டுள்ளது.
அந்தக் காருக்கு தான் இப்படி 30 மாதங்களில் 34 டயர்களை மாற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் மாணி.
காதலனுடன் ஆற்றுப் பாலத்தில் ஜாலி.. காதலியை துரத்திய கும்பல்.. காதலனை ஆற்றில் வீசிய கொடூரம்!
மின்சாரத்துறை
கேரள மின் துறை அமைச்சராக இருப்பவர் மாணி. மொத்தம் 19 பேர் கொண்ட கேரள அமைச்சரவையில் முதலமைச்சருக்கு அடுத்த வரிசைகளில் 5-வது இடத்தில் இருப்பவர் மாணி. கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த நிர்வாகியாக இருக்கும் இவர் இடுக்கி மாவட்டம் உடும்பன்சோழா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
2017 மாடல்
அமைச்சர் மாணியின் பயன்பாட்டிற்காக கேரள அரசு சார்பில் இன்னோவா கிரிஸ்டா 2017-ம் ஆண்டு மாடல் கார் தரப்பட்டுள்ளது. அந்தக்காரில் தான் தனது தொகுதி நிகழ்ச்சிகள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்கிறார்.
34 டயர்கள்
இந்நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஒருவர் அமைச்சர்களின் அரசு வாகனங்களுக்கு ஏற்பட்ட செலவுத் தொகை குறித்த விவரத்தை ஆர்.டி.ஐ.யில் கேட்டுள்ளார். அதில் தான் மாணி 34 டயர்களை மாற்றிய தகவலும் கிடைத்துள்ளது. இதையடுத்து மாணியை விமர்சித்து கேரள நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மலைப்பகுதியில் பயணம்
சமூக வலைதளங்களில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் மாணி, தனது தொகுதி மலைப்பிரதேசம் என்றும், ஒவ்வொரு கிராமமும் தனித் தனி தீவுகளை போல் மலையில் அமைந்துள்ளதால் அங்கெல்லாம் இன்னோவா காரில் தான் செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மலைபாதைகளில் செல்லும் போது டயர்கள் அதிக தேய்மான அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
கவலையில்லை
மேலும், 1.24 லட்சம் கி.மீ. தூரம் இதுவரை இன்னோவா காரில் பயணித்திருப்பதாகவும் அதனால் தான் டயர்களை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இடுக்கி மாவட்டத்தில் இருந்து தலைநகர் திருவனந்தபுரத்துக்கு தொடர்ந்து பயணிக்க வேண்டியது உள்ளதாகவும், இதனால் விமர்சனங்களை பற்றி கவலைப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.