Kerala Elephant: அம்மா.. என்னாச்சும்மா? பேசுங்கம்மா, எனக்கு மூச்சு விடமுடியலம்மா.. கதறல் கேட்கிறதா?
திருவனந்தபுரம்: கேரளாவில் கர்ப்பிணி யானை அன்னாசி பழத்தை நம்பி வாங்கி சாப்பிட்டு, பலியான சம்பவம் மனித நேயம் உள்ள ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் ஈட்டி போல பாய்ந்துள்ளது.
Recommended Video
மலப்புரம் மாவட்டத்தில் நடந்த இந்த சோக சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆசையாக அன்னாசி பழம் சாப்பிட வந்த யானைக்கு, அந்த பழத்துக்குள் வெடிவைத்து கொடுத்துள்ளனர் சில கிராமவாசிகள். இதை கடித்து சாப்பிட்டதால், டமால் என்ற ஒலியுடன் வெடித்து சிதறியுள்ளது வெடி.
கர்ப்பிணி யானையை துரத்த அன்னாசி பழத்தில் வெடி.வலியால் துடித்து ஆற்றில் நின்றபடியே உயிரை விட்ட துயரம்
நின்றபடி பலியான யானை
வாய் மற்றும் தும்பிக்கையின் அடிப்பகுதி கிழிந்து தொங்க தொடங்கியது. வலியால் துடித்த யானை அருகே உள்ள ஒரு தண்ணீர் தேக்கத்திக்குள் சென்று நின்று கொண்டது. தனது வாயை தண்ணீருக்குள் வைத்துக்கொண்டு உயிர் வாதையை அது அனுபவித்தது. கொஞ்சம் கொஞ்சமாக ரத்தம் வெளியேற, நின்றபடியே அந்த யானை பரிதாபமாக பலியானது.
கர்பிணி யானை பலி
இந்த கொடுமையிலும் பெரிய கொடுமை என்னவென்றால், அந்த யானை கர்ப்பிணி என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. வாயில்லாத ஜீவன் பலியானது ஒரு பக்கம் என்றால், உலகை எட்டிப் பார்க்க முடியாமல், வயிற்றுக்குள் இருந்த குட்டியும் தாய் யானையோடு சேர்த்து பலியாகியுள்ளது.
கதறிய குட்டி யானை
தாய் யானை ரத்தம் சிந்தி சிந்தி உயிரை வெளியேற்றியபோது, அதன் வயிற்றுக்குள் இருந்த குட்டி எந்த மாதிரி எல்லாம் துடித்திருக்கும்.. அம்மா, அம்மா என்று அதன் பாஷையில், அது கத்தி இருக்குமே.. இந்த மனித இனத்தை நம்பி, அன்னாசி பழத்தை நம்பி சாப்பிட்ட குற்றத்தை தவிர அது வேறு என்ன செய்திருக்க முடியும்?
ஏய் மனிதா
"மனிதர்கள் பொதுவாக மூர்க்கத்தனமாக நடந்து கொண்டால், மிருகம் என்று சொல்வார்கள். ஆனால் இனிமேல் நம் காட்டுக்குள் யாராவது மூர்க்கத்தனமாக நடந்து கொண்டால், அவர்களை, 'ஏய் மனிதா..' மனிதன் மாதிரி மோசமாக நடந்து கொள்கிறாரேயே, என்று சொல்லி கண்டிக்க வேண்டும்" என்பதுதான் அந்த யானையின் கடைசி ஆசையாக இருந்திருக்கக்கூடும்.
இரட்டை வேதனை
வலியால் துடித்த பெரிய யானை ரத்தம் சிந்தி பலியானது ஒரு பக்கம் என்றால், தாய் யானை உயிருக்கு போராடியபோது, சுவாசம் தடைபட்டு வயிற்றுக்குள் இருந்த குட்டி யானை பலியானது மற்றொரு பக்கம் என்று இரட்டை சோகத்தில் மூழ்கியுள்ளனர் மனிதநேயம் கொஞ்சமேனும் கொண்ட மக்கள்.
ஓவியம்
அந்த பெரும் துயரை சிறு ஓவியத்தில் மொத்தமாக அள்ளி தெளித்துள்ளது இந்த படம். பல்வேறு சமூக வலைத்தளங்களிலும், இந்த படம், வைரலாக சுற்றி வருகிறது. யானையின் வாயில் வடிந்த ரத்தமும், வயிற்றுக்குள் இருந்த குட்டியின் கதறலையும் ஒரே படத்தில் இதைவிட யாராலும் உருக்கமாக தந்துவிட முடியாது. மனிதன் மனங்களில் கொஞ்சமாவது மனிதம், மிச்சம் இருந்தால் அதை இந்த படம் மனசாட்சியை தட்டிக் கேட்கட்டும், அல்லது நமக்கென்ன வந்தது என்று நழுவிச் செல்லட்டும்.