அங்கேயும்தான்... கேரளா மீனவர்களுக்கு நீதியை பெற்றுத்தருவேன் என்ற மோடியின் உறுதிமொழி 'கோவிந்தா'
திருவனந்தபுரம்: இத்தாலிய கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் உரிய நீதியைப் பெற்றுத்தருவேன் என 2014-ல் உறுதியளித்த மோடி அவ்வழக்கில் சிறு துரும்பைக் கூட அசைத்துப் போடவில்லை என கடலைப் போல கொந்தளித்துக் கிடக்கின்றனர் மீனவர்கள்.
2012-ம் ஆண்டு இத்தாலிய கடற்படையினரால் கேரளா மீனவர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வழக்கில் 2 இத்தாலிய கடற்படையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் நீதிமன்றத்தின் அனுமதிபெற்று இத்தாலிக்கு அவர்கள் சென்று திரும்பினர். 2014 லோக்சபா தேர்தலில் இந்த விவகாரத்தை பிரதமர் மோடி கையிலெடுத்துக் கொண்டார். இத்தாலிய கொலைகாரர்களை இத்தாலிக்கு திருப்பி அனுப்புவதா? கேரளா மீனவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வோம் என சங்கநாதம் செய்தார்.
டிஜிட்டல் கேமரா, இமெயில்.. இறுதி கட்ட தேர்தலின்போதா மோடி இப்படி சிக்கலில் மாட்டுவது!
அதாவது தமிழகத்தில் தேர்தலுக்கு கடல் தாமரை போராட்டம் நடத்தி மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்து தருவேன் என சுஷ்மா ஸ்வராஜ் வாக்குறுதி அளித்தார். அதேபோல்தான் மோடியும் கேரளாவில் நீதி கிடைக்காமல் ஓயப்போவதில்லை என உரக்க முழக்கமிட்டார். தேர்தல் முடிந்து நாட்டின் பிரதமரானார் மோடி.
ஆனால் அதன்பின்னர் நடந்தது வேறு. இத்தாலிய கடற்படையினர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என மனுப் போட்டனர். உடனே மத்திய அரசும் மனிதாபிமான அடிப்படையில் 'ஆட்சேபனை' இல்லை என்று பதில் தந்து கொலைகாரர்களை பறக்கவிட்டது.
இப்படி மோடியின் ஆட்சிக் காலம் முழுவதும் இத்தாலிய கொலைகாரர்களுக்கு ஆதரவாகத்தான் மத்திய அரசு செயல்பட்டது. பாதிக்கப்பட்ட கேரளா மீனவர்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்க ஒருபிடி நகர்வைக் கூட நகர்த்தவில்லை. மீன்வள அமைச்சகம் அமைப்போம் என்கிற உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டதைப் போல அதையும் பறக்கவிட்டுவிட்டனர். இதனால் கேரளா மீனவர்கள் கடும் கொந்தளிப்புடன் இருந்து வருகின்றனர்.