தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை.. 77 பேர் மரணம்.. கேரளாவில் நீடிக்கும் மழை.. வெள்ளம்!
கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு இதுவரை 77 பேர் பலியாகி உள்ளனர்.
திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு இதுவரை 77 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த ஒருவாரமாக நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. முக்கியமாக கேரளாவில் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. வானிலை மைய அதிகாரிகள் எதிர்பார்த்ததை விட அங்கு அதிக அளவில் தற்போது மழை பெய்கிறது.
ஏற்கனவே அங்கு வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவை உலுக்கிய வெள்ளம் - புகைப்படங்கள்
காரணம்
மழை மற்றும் நிலச்சரிவு என்று இரண்டும் ஏற்பட்டுள்ள காரணத்தில் கேரளாவில் மீட்பு பணிகள் செய்வது கடினமாகி உள்ளது. தாழ்வான மாவட்டங்களில் வெள்ளமும், மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து அங்கு பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
எத்தனை
கடந்த ஒரு வாரத்தில் கேரளாவில் 85 நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக அங்கு வயநாட்டில் 20க்கும் அதிகமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடுதான் அங்கு மழை காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மலப்புரம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்கள் மிக மோசமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது.
மரணம் எத்தனை
இதுவரை கேரளாவில் மழை காரணமாக 77 பேர் பலியாகி உள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்னும் நடந்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முகாம்
அதேபோல் இந்த மழையால் மொத்தம் 1400 மீட்பு முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 2.2 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்பு படையினர் தற்போது அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.