கேரளாவில் 10 அணைகளுக்கு ரெட் அலர்ட்.. திறக்கப்பட்டது தண்ணீர்.. கரையோர மக்களுக்கு வார்னிங்
திருவனந்தபுரம்: நீர் மட்டம் உயர்ந்து வருவதால் 'ரெட் அலர்ட்' பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள கேரளாவிலுள்ள அனைத்து 10 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அணைகளைத் திறப்பதற்கு காரணம், நீர் மட்டத்தை 90 சதவிகிதத்திற்கும் குறைவாக வைத்திருப்பதுதான். எனவே, நீர்நிலைகளில் மீன்பிடித்தல் அல்லது வேறு எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு பம்பை அணையும், இடுக்கி அணையின் ஷட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில், காலை 6 மணிக்கு இடமலையார் அணை மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. காலை 11 மணிக்கு இடுக்கி அணை திறக்கப்படும். அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தத்தளிக்கும் கேரளா.. கைகொடுக்கும் மு. க ஸ்டாலின்.. திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி அறிவிப்பு
1 லட்சம் கன அடி
அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் கூறினார். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர் மட்டம் உயர்ந்து வரும் நிலையில், கேரளாவில் உள்ள 10 அணைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள்
காக்கி அணையின் இரண்டு ஷட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மாநில வருவாய் துறை அமைச்சர் ராஜன் திங்கள்கிழமை தெரிவித்தார். காக்கி, சோலையார், மாட்டுப்பட்டி, மூழியார், குண்டலா மற்றும் பீச்சி ஆகிய 10 அணைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜன் கூறினார்.
ஆரஞ்சு அலர்ட்
அது தவிர, மற்ற எட்டு அணைகள் தொடர்பாக ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சோலையார், பம்பா, காக்கி, இடமலையார் உள்ளிட்ட பல்வேறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், சோலையார் அணை திங்கள்கிழமை திறக்கப்பட்டது. அச்சங்கோவில் ஆற்றின் கரையோரத்தில் உள்ள பந்தல் அருகே உள்ள சேரிக்கல், பூசிக்காடு, முடியூர்கோணம் மற்றும் குரம்பாலா பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கேரளாவில் மழை வெள்ளம்
கடந்த வருடத்தை போலவே, கேரளாவின் மழை, வெள்ளம் துயரம் இந்த ஆண்டும் தொடர்கிறது. நிலச்சரிவு மற்றும் மழை காரணமாக 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து விதிமுறைகளை மீறிய சுரங்கங்கள் மற்றும் கட்டுமானங்கள் நடைபெறுவதே பெரு மழை வெள்ளத்திற்கு காரணமாக கூறப்பட்ட நிலையில் இது தொடர்பாக ஆய்வு செய்த கட்ஜில் 2011ஆம் ஆண்டு அளித்த அறிக்கையில் தேயிலைத் தோட்டங்களை மீண்டும் காடுகளாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை அளித்தார். அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்த நிலையில் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
Recommended Video
இயற்கை பாதுகாப்பு
கேரளா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 64 ஆயிரம் சதுர கிலோமீட்டர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் எந்தவிதமான கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது போன்ற பல பரிந்துரைகள் அந்த குழுவால் வழங்கப்பட்டது. எனினும் இரு பரிந்துரைகளும் பெரிய அளவில் கடைபிடிக்கப் படவில்லை என்பதுதான் ஆண்டுதோறும் ஏற்படும் பெருவெள்ளத்திற்கு காரணம் என்று, சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதேநேரம், கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் இவ்வாறு பெரு வெள்ளம் ஏற்படாத நிலையில், கேரளாவில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.