ஓ.பன்னீர் செல்வம் விழாவில் பறந்த ட்ரோன்.. அதிர்ச்சியில் கேரள அரசு
திருவனந்தபுரம்: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்ற விழாவில் ''ட்ரோன்' பறந்தது தொடர்பாக தமிழக அதிகாரிகளிடம் கேரள வனத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தேக்கடி ஷட்டர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ஷட்டரை இயக்கி வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீரை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஓபிஎஸ் மகனும் தேனி லோக்சபா உறுப்பினருமான ரவீந்திரநாத்குமார், எம்.எல்.ஏ, ஜக்கையன், கலெக்டர் பல்லவி பல்தேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி... சென்னையில் அன்று பேசிய பேச்சு.. ரஜினிக்கு குறி வைக்கும் விசாரணை ஆணையம்!
ட்ரோன் விமானம்
இந்நிகழ்ச்சி நடைபெற்ற போது ட்ரோன் எனப்படும் சிறிய வகை விமானத்தை பறக்க விடப்பட்டு நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டது. பொதுவாக இதுபோன்ற ஒளிப்பதிவு இப்போதெல்லாம் திருமணம் உள்ளிட்ட தனியார் நிகழ்ச்சிகளில் கூட செய்யப்படுகிறது. கேமரா பல கோணங்களில் மேலே இருந்தும் படம் பிடிக்க இது உதவும்.
முல்லை பெரியாறு
ஆனால், நிகழ்ச்சி நடைபெற்ற இடம் பாதுகாக்கப்பட்ட பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் அமைந்துள்ளது. இது முல்லைப் பெரியாறு அணையின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இங்கு புகைப்படம் எடுக்கவோ, ஒளிப்பதிவு செய்யவோ கேரள காவல் துறை மற்றும் வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம்.
விளக்கம்
ஆனால், தமிழக துணை முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ட்ரோன் கேமரா பயன்படுத்தப்பட்டபோது, கேரள அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை. எனவே இது தொடர்பாக சரணாலய இணை இயக்குனர் ஷில்பா குமார் தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலக பொறுப்பு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
ஆய்வுகள்
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது என்று தமிழகம் சொல்லி வருகிறது. பல ஆய்வுகளும் அதை நிரூபித்துள்ளன. ஆனால், கேரள அரசு அந்த அணை பலவீனமாக இருப்பதாக தெரிவித்து வருகிறது. இந்த நிலையில்தான், ட்ரோன் மூலமாக அணையின் விவரங்களை தமிழக அரசு கண்காணித்திருக்கும் என்ற அச்சத்தில் கேரள அரசு இருப்பதாக கூறப்படுகிறது.