இட்லி, ஊத்தப்பம், பன்னீர் டிக்கா.. ஒரு மணி நேரத்தில் 33 வகை.. 10 வயது சிறுமியின் அசத்தல் சாதனை
திருவனந்தபுரம் : கேரளாவில் ஒரு மணி நேரத்தில் 33 வகையான உணவுகளைச் சமைத்து, சாதனை படைத்துள்ளார் 10 வயதான சிறுமி ஒருவர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பிரஜித். இந்திய விமானப் படையில் விங் கமாண்டராக பணி புரிந்து வரும் அவரது 10 வயது மகள் சான்வி பிரஜித். சிறு வயதில் இருந்தே சான்விக்கு சமையலில் ஆர்வம் அதிகமாம்.
சான்வியின் இந்த சமையல் ஆர்வத்திற்கு முக்கியக் காரணம் அவரது தாய் மஞ்சிமா. அவர் ஒரு சமையல் வல்லுநர். தான் கலந்து கொள்ளும் சமையல் நிகழ்ச்சிகளுக்கு மகள் சான்வியையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் மஞ்சிமாவைப் போலவே தானும் ஒரு சமையல் கலைஞராக மாற வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார் சான்வி.
கூடவே அப்பா விமானப் படையில் இருந்ததால் அங்கு நடக்கும் பார்ட்டிகளில் பரிமாறப்படும் விதவிதமான உணவுகளைப் பார்த்து, அவற்றையும் தான் செய்து பார்க்க வேண்டும் என நினைத்துள்ளார்.
முதல் போட்டி
குழந்தையாக இருக்கும்போதே சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அடை பாயாசம் செய்து அசத்தியுள்ளார் சான்வி. அதன் சுவையை அனைவரும் பாராட்டினாலும், அடுப்பை பயன்படுத்த முடியாத அளவிற்கு சிறுமி என்ற காரணத்திற்காக அவரால் அடுத்த கட்ட போட்டிக்கு செல்ல முடியவில்லை.
யூடியூப் சேனல்
ஆனாலும் சான்வியின் சமையல் ஆர்வத்தை ஊக்குவிக்க நினைத்த அவரது பெற்றோர், அவளுக்கென தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துக் கொடுத்துள்ளனர். அதில் தனக்குப் பிடித்தமான உணவுகளைச் சமைத்து வீடியோவாக வெளியிட ஆரம்பித்துள்ளார் சான்வி.
உதவிய ஊரடங்கு
ஊரடங்கு காலத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் கிடைத்த நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். விதவிதமாக சமையல் செய்யக் கற்றுக் கொண்டார். தான் கற்றுக் கொண்ட பலகாரங்களை வைத்து சாதனை செய்ய திட்டமிட்டுள்ளார் சான்வி.
சமையலில் சாதனை
அதன்படி, இட்லி, ஊத்தப்பம், காளான் டிக்கா, பன்னீர் டிக்கா, சிக்கன் ரோஸ்ட், அப்பம், சாண்ட்விச், ஃப்ரைட் ரைஸ் என 33 வகையான உணவுகளை ஒரே மணி நேரத்தில் சமைத்து, சான்வி சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனை ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.