சிக்கிய மாஸ்டர் மைண்ட்.. தங்க கடத்தல் "ஸ்வப்னா சுரேஷ்" அதிரடி கைது.. பெங்களூரில் வளைத்த என்ஐஏ!
திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தேடப்பட்டு ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டு உள்ளார். தேசிய புலனாய்வு ஆணையம் (என்ஐஏ - NIA )மூலம் இவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
கேரளாவில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த தங்க கடத்தல் வழக்கில் பெரிய திருப்பம் ஏற்படடுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தூதரகப் பெயரைப் பயன்படுத்தி நடந்து வந்த தங்க கடத்தல் கடந்த வாரம் அம்பலம் ஆனது .
சுங்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் படி இந்த தங்க கடத்தல் மொத்தமாக வெளியே வந்தது. இதற்கு பின் பலஅதிகாரிகள், கேரள முதல்வர் அலுவலகத்தில் வேலை பார்த்த அதிகாரிகள் உட்பட பலருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .
தமிழகம் தப்பி ஓடிய ஸ்வப்னா? வழியில் 'நந்தினியிடம்' பேசியதாக பரபர தகவல்.. வெளியான சிசிடிவி காட்சி
தங்கம் பறிமுதல்
இந்த நிலையில் இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி 30 கிலோ தங்கம் வைக்கப்பட்டிருந்த பார்சல் பறிமுதல் செய்யப்பட்டது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க தொடங்கினார்கள். இந்த மொத்த தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி என்று தெரிவிக்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் பணியாற்றிய சரித் குமார் என்பவர் பெயருக்கு இந்த பார்சல் வந்தது.
கைது செய்தனர்
அந்த அலுவலகத்தில் இருந்து சரித் குமார் முன்பே பனி நீக்கம் செய்யப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தகைது . இந்த பார்சலை வாங்க வந்த சரித் குமார் அங்கேயே சுங்கதுறை அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிபட்டார். இவரிடம் நடந்த விசாரணையில்தான் ஸ்வப்னா சுரேஷுக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடுக்கப்பட்டது. அதே அலுவலகத்தில் வேலை பார்த்து, கிரிமினல் புகார் காரணமாக நீக்கப்பட்டவர்தான் ஸ்வப்னா சுரேஷ்.
மாஸ்டர் மைன்ட்
இந்த தங்க கடத்தல் மொத்தத்திற்கு பின்புலமாக இருந்தவர்தான் ஸ்வப்னா சுரேஷ். கேரளா முதல்வர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் இவர் பணியாற்றி வந்தவர். தன்னுடைய அரசியல் அதிகாரம் மற்றும் பின்புலத்தை பயன்படுத்தி இவர் தங்க கடத்தலை செய்து வந்து இருக்கிறார். இதையடுத்து தேசிய புலனாய்வு ஆணையம் இவர் மீது எப்ஐஆர் பதிந்தது.
முன் ஜாமீன்
இன்னொரு பக்கம் ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவானார். என்ஐஏ இவரை தேடி வந்த நிலையில் இவர் தலைமறைவானார். இவர் எங்கே சென்றார் என்று மூன்று நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடந்து வந்தது . அதோடு இவர் திருவனந்தபுரம் ஹைகோர்ட்டில் முன் ஜாமீன் வேண்டி விண்ணப்பித்து இருந்தார். இவரின் வழக்கு கேரள அரசுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் எதிராக பெரிய அழுத்தமாக மாறியது.
கைது செய்யப்பட்டார்
இந்த நிலையில் தற்போது தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தேடப்பட்டு ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டு உள்ளார். தேசிய புலனாய்வு ஆணையம் (என்ஐஏ - NIA )மூலம் இவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பெங்களூரில் இவர் கைது செய்யப்பட்டார். இவரின் உறவினர் ஒருவரும் அவருடன் கைது செய்யப்பட்டுள்ளார். நாளை கொச்சி நீதிமன்றத்தில் இவர் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.