தங்க கடத்தல்.. கேரள அமைச்சரிடம் என்.ஐ.ஏ விசாரணை.. பதவி நீக்க பாஜக, காங்கிரஸ் போராட்டம்.. தடியடி
திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் வழக்கில் கேரள உயர்கல்வித்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரான ஜலீலிடம் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையை தொடர்ந்து அவரைப் பதவி விலக வேண்டும் என்று முதல்வரை வலியுறுத்தி, கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.
திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் ஸ்வப்னா சுரேஷ். இவருக்கு கேரள முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பதாக விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.
எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை.. திடீரென்று அஜித் வெளியிட்ட அதிரடி அறிக்கை.. என்ன காரணம்?
அமைச்சருக்கு தொடர்பு
இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமை, சிபிஐ, சுங்கத்துறை, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை விசாரித்து வருகின்றன. இந்த விசாரணையின்போது கேரள மாநில உயர் கல்வித்துறை மற்றும் சிறுபான்மையினர் துறை அமைச்சரான ஜலீலுக்கு இந்த தங்க கடத்தலில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
வேறு காரில்
இதையடுத்து ஜலீலிடம் இன்று கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் காரில் அந்த அலுவலகம் வந்தார் ஜலீல். காலை 6 மணியளவில் அவர் அங்கு வந்த நிலையில் மதியம் 1 மணி வரை தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. உள்ளூர் மீடியாக்கள் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு இன்னொருவர் காரில் ஜலீல், அங்கு வந்ததாக கூறப்படுகிறது.
போராட்டங்கள்
இதனிடையே ஜலீலை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி, பாலக்காடு, கொல்லம், கோழிக்கோடு, கோட்டயம் மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் பாஜக மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. காவல்துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து அவர்களை விரட்டியடித்தனர். பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏ பலராம் காவல்துறை நடத்திய தடியடியின் போது காயமடைந்தார்.
முதல்வர் திட்டவட்டம்
அதேநேரம் கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த விவகாரத்துக்காக ஜலீலை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது சரியாக இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வழியாக குர்ஆன் உட்பட பல்வேறு மத வழிபாட்டு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை ஜலீல் பெற்றுள்ளார். இதனுடன் தங்கமும் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் 2010 கீழ் இவ்வாறு பரிசுப் பொருட்கள் பெறுவது குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே இதுபோல பரிசு பொருட்களை பெற்ற செயலுக்காக ஜலீலை பதவி நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஸ்வப்னா சுரேஷ்
இதுபற்றி முதல்வர் பினராய் விஜயன் கூறுகையில், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், குர்ஆன் புத்தகத்தை பெற்றதற்காக பதவி விலக கூறுவது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் தங்க கடத்தலில் ஈடுபட்டதற்காக கடந்த ஜூலை மாதம் தேடப்பட்டு, பின்னர் பெங்களூரில் தலைமறைவாக இருந்த போது கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.