"அதான் நான் செஞ்ச தப்பு.. தற்கொலை பண்ணிப்பேன்.. நீங்கதான் பதில் சொல்லணும்".. ஸ்வப்னாவின் பரபர ஆடியோ!
கேரள ஸ்வப்னா தான் பேசிய ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார்
திருவனந்தபுரம்: "நான் தப்பு பண்ணல.. ஏன் நீங்கள் டாபிக் மாறி போறீங்க எல்லாரும்.. துபாயில் இருந்து அந்த பார்சலை தூதரகத்துக்கு அனுப்பியது யார்? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள்.. இப்படி என்னை பத்தி பேசிட்டு இருந்தால், தற்கொலைதான் செய்துப்பேன்.. அதுக்கு நீங்க ஒவ்வொருத்தரும் பதில் சொல்லணும்" என்று தங்கம் கடத்தியதாக கூறப்படும் ஸ்வப்னா ஒரு ஆடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
4 நாட்களாக ஸ்வப்னாவை தேடி கொண்டிருக்கிறார்கள்.. கேரள மாநில அரசுக்கு சிக்கல் மேல் சிக்கல் எழுந்துள்ள நிலையில், தங்கம் கடத்திய இவரை காணவில்லை.
ஸ்வப்னா 10வது கூட படிக்கவில்லை.. ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி உள்ளார், கடத்தல் கும்பலுடன் தொடர்பு, தம்பிக்கு கொலை மிரட்டல், சக ஊழியர்கள் மீது பாலியல் புகார்கள்.. என ஸ்வப்னாவின் ஒவ்வொரு பகீர்களும் வெளியாகி வருகின்றன... பினராயி விஜயனின் செயலாளர் சிவசங்கரன் பதவியிலேயே தூக்கப்பட்டுள்ளார்.. எதிர்க்கட்சிகளை கையிலேயே பிடிக்க முடியவில்லை.. பினராய் பதவி விலக வேண்டும் என்று வலுவாக கோரிக்கை விடுத்து வருகின்றன.
கேரளாவே பரபரப்பில் உள்ள நிலையில், ஸ்வப்னா ஒரு ஆடியோவை ரிலீஸ் செய்துள்ளார்.. அந்த ஆடியோவில் அவர் சொல்லி உள்ளதாவது: "தூதரகத்துக்கு பார்சல் வந்தால், அது கிடைப்பதில் லேட் ஆகிவிடுகிறது.. அதனால் அதை பற்றி கார்கோவில் பேசும்படி தூதரகத்தில் இருந்து என்கிட்ட சொன்னார்கள். அந்தப் பார்சலை கொஞ்சம் சீக்கிரமா விடுவிக்கும்படி, கார்கோ ஏசி ராமமூர்த்தியிடம் போனில் பேசினேன்.
அவரும் சரி என்று சொன்னார்.. இதுதான் நான் பண்ண தப்பு.. மத்தபடி எனக்கும் அந்த பார்சலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... அதுக்கப்பறம் நடந்த எந்த சம்பவத்துக்கும் நான் பொறுப்பு, காரணம் இல்லை.. தூதரகத்தில் நான் வேலை பார்த்ததால், கேரள முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், விஐபிக்களிடம் நான் பேசியிருக்கிறேன்.
யுஏஇ கான்சிலேட்டர் ஜெனரலின் நிர்வாக வேலை விஷயமாக விஐபிக்களை சந்தித்து பேசியிருக்கிறேன். இப்படி தூதரக வேலைக்காகத்தான் பேசினேனே தவிர, சொந்த விஷயத்துக்காக யார்கிட்டயும் பேசினது இல்லை.. என் தம்பிக்கு வேலை இல்லை.. என் அம்மா ஒரு விதவை.. எனக்கு 2 சின்ன குழந்தைங்க இருக்காங்க.. ஒரு வாடகை வீட்டில்தான் இருக்கிறேன்.
தங்கக் கடத்தல் ஸ்வப்னா பத்தாம் வகுப்பு கூட படிக்கலையாமே அப்புறம் எப்படி அதிகாரி பதவி?
முதல்வர் ஆபீஸிலோ, சபாநாயகர், அமைச்சர்கள் ஆபீசிலோ சென்று எந்த கான்டிராக்ட்களிலும் நான் கையெழுத்து போட்டது கிடையாது.. யுஏஇ செயலாளர் என்ற முறையில்தான் முதல்வர், அமைச்சர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் அவர்களுடன் இருந்தேன்.. தூதரகத்தில் நான் எந்த தப்பும் செய்யவில்லை, அங்கிருந்து என்னை சஸ்பெண்ட்டும் செய்யவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் தூதரகத்துக்கு தேவையான எல்லா உதவிகளை நான் செய்துவந்தேன். ஸ்பேஸ் பார்க்கில் ஊழியராக இருந்துகொண்டு யுஏஇ தூதரக விஷயத்தில் ஏன் தலையிடுகிறேன் என நீங்கள் கேட்கலாம்... யுஏஇ-யில் பிறந்து வளர்ந்த எனது அன்புதான் அதற்கு காரணம். யுஏஇ என்றால் எனக்கு உயிர். எனவே யுஏஇ-க்கு எதிராக சதிசெய்ய நான் நினைக்கவே மாட்டேன்.
வரப்போகிற தேர்தலை மனசில் வெச்சிக்கிட்டு, மீடியாவும் மற்றவர்களும் என்னை பற்றி கருத்துகளை பரப்புகிறார்கள்... இது முதல்வருக்கோ, அமைச்சர்களுக்கோ, சபாநாயகருக்கோ பாதிப்பை ஒருபோதும் ஏற்படுத்தாது... என் கணவர், 2 பிள்ளைகளுக்கு மட்டுமே இது பிரச்னையை ஏற்படுத்தும்... நானும் என் குடும்பமும் தற்கொலை செய்துகொண்டால், எங்கள் மரணத்துக்கு நீங்கள் ஒவ்வொருவரும் பதில் சொல்ல வேண்டும்.
தங்கம் கடத்தலில் ஈடுபட்டதால் நான் தலைமறைவாக இருக்கவில்லை... பயத்தின் காரணமாகவும், என் குடும்பத்துக்கு வந்த மிரட்டல் காரணமாகவும் நான் தலைமறைவாக இருக்கிறேன்... என் பின்னால் முதலமைச்சரோ, ஐடி செயலாளரோ, சபாநாயகரோ, அமைச்சர்களோ இல்லை. எல்லா அமைச்சர்களோடும் நான் பேசியிருக்கிறேன், நிகழ்ச்சிகளுக்கு அழைத்துள்ளேன். தேர்தலுக்காக நீங்கள் இதை செய்கிறீர்கள். இதனால் அமைச்சர்கள் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை.
ஏன் நீங்கள் டாபிக் மாறி போகிறீர்கள். துபாயில் இருந்து அந்த பார்சலை தூதரகத்துக்கு அனுப்பியது யார்? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். அதைவிட்டுவிட்டு கேரளத்தில் உள்ள அப்பாவிகளை தொந்தரவு செய்யாதீர்கள். இதுபோன்று மீடியாக்கள் நடந்துகொண்டால் நாட்டில் நிறைய ஸ்வப்னாக்கள் மரணமடையும் நிலை ஏற்படும்" என்று அந்த ஆடியோவில் கூறியுள்ளார் ஸ்வப்னா!