தென்காசிகாரருக்கு அடித்தது ஜாக்பாட்..விற்காமல் இருந்த ஒரு லாட்டரி டிக்கெட்..விழுந்தது 12 கோடி பரிசு!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்: கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரியில் தென்காசிகாரருக்கு விற்காமல் வைத்திருந்த ஒரு லாட்டரி டிக்கெட்டிற்கு 12 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
Recommended Video
லாட்டரியில் அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு அவ்வப்போது பெரிய ஜாக்பாட் கிடைத்து வருகிறது. ஆனால் அதேநேரம் இந்த லாட்டரி டிக்கெட்டில் அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கிய பல குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றன என்பதும் மறுக்க முடியாது.
அதனால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில் ஒரே நாளில் தமிழகத்தில் லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு நிரந்தரமாக தடை விதித்தார். இன்று வரை லாட்டரி விற்பனைக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை.
குழுக்கல்
அதேநேரம் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அண்மையில் கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரியில் முதல் பரிசு 12 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. இதற்கான விற்பனை கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது. இதன் குழுக்கல் கடந்த 17ம் தேதி திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆரியா ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
12 கோடி
முதல் பரிசு 12 கோடி 'எக்ஸ்ஜி 358753' என்ற எண்ணுள்ள டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளாக அறிவிக்கப்பட்டது. இந்த டிக்கெட் தமிழக கேரள எல்லையான ஆரியங்காவில், தென்காசியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் நடத்தி வந்த லாட்டரி கடையில் விற்பனைக்கு வந்தது என்பது தெரியவந்தது.
கண்டுபிடித்தனர்
நேற்று மதியம் வரை டிக்கெட் வாங்கியது யார் என்பது தெரியாமல் கேரளாவில் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த டிக்கெட்டை வாங்கியது தென்காசியை சேர்ந்த ஷரபுதீன் என்று தெரிய வந்தது. இவர் வெங்கடேஷிடம் ரூபாய் 300 கொடுத்து லாட்டரி டிக்கெட் வாங்கியதும் தெரியவந்தது. ஆரியங்காவு முதல் புனலூர் வரை இவர் மோட்டார் பைக்கில் லாட்டரி விற்பனை செய்து வருகிறார்.
ஒப்படைத்தார்
ஷரபுதீனிடம் விற்காமல் இருந்த ஒரு லாட்டரி டிக்கெட் தான் 'எக்ஸ்ஜி 358753' . இந்த எண்ணுக்கு முதல் பரிசான 12 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. லாட்டரியை நேற்று ஷரபுதீன் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி துறை அலுவலகத்தில் அதன் இயக்குனர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தார்.
கேரள எல்லையில் விற்கிறார்
ஏஜென்ட் கமிஷன் மற்றும் வரி நீங்கலாக 7.56 கோடி ஷரபுதீனுக்கு கிடைக்கும். இவருக்கு சபீனா என்ற மனைவியும் பர்வேஸ் முஷாரப் என்ற மகனும் உள்ளனர். வளைகுடா நாட்டில் பணி புரிந்து வந்த ஷரபுதீன் சில வருடங்களுக்கு முன் ஊருக்கு திரும்பி கேரள எல்லையான ஆரியங்காவில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.