சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வழக்கு: கேரளா அரசிடம் அறிக்கை கேட்கிறார் ஆளுநர் ஆரிப் முகமது கான்
திருவனந்தபுரம்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு வழக்கு தொடர்ந்தது குறித்து மாநில அரசிடம் ஆளுநர் ஆரிப் முகமது கான் அறிக்கை கேட்டுள்ளார்.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் சாசனத்துக்கு எதிரான சி.ஏ.ஏ.வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அத்தீர்மானம் வலியுறுத்தியது.
மேலும் சி.ஏ.ஏ.வை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் கேரளா அரசு வழக்கு தொடர்ந்தது. சி.ஏ.ஏ.வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முதல் மாநிலம் கேரளா.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், கேரளா அரசு உச்சநீதிமன்றத்துக்குப் போவதில் பிரச்சனை இல்லை. ஆனால் மாநில ஆளுநராகிய தம்மிடம் தெரிவிக்காமல் எப்படி உச்சநீதிமன்றத்துக்கு போகலாம்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் அரசியல் சாசனப்படி தாமே மாநிலத்தின் தலைமை நிர்வாகி. ஆகையால் தம்மிடம் தகவல் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் ஆரிப் முகமது கான் கூறியிருந்தார்.
இந்நிலையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறித்து அறிக்கை தருமாறு கேரளா அரசிடம் ஆளுநர் ஆரிப் முகமது கான் விளக்கம் கேட்டிருக்கிறார்.
ஏற்கனவே கேரளாவை பின்பற்றி பஞ்சாப் மாநில அரசும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் கேரளாவை போல உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.