வாவ்.. தமிழக அரசு தவற விட்டதை அறிவித்த கேரள முதல்வர்.. மீனவர்கள் மகிழ்ச்சி
திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் தொற்றுநோய் அதிகரித்துள்ள நிலையில், லாக்டவுனுக்கு மத்தியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு வகையான, தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குவதாக முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமையான இன்று அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு, பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
கேரள தையல் தொழிலாளர் நல நிதி வாரியம், கேரள நகை தொழிலாளர் நல நிதி வாரியம், கேரள வேளாண் தொழிலாளர் நல நிதி வாரியம், கேரள மூங்கில் தொழிலாளர் நலத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
கேரளாவில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் தலா ரூ .2,000 வழங்கப்படும். கேரளாவில் சுமார் 1.5 லட்சம் மீனவர்கள் உள்ளனர். சுமார் 50,000 லாட்டரி விற்பனையாளர்களுக்கு தலா ரூ .1,000 வழங்கப்படும்.
பீடி தொழிலாளர்கள், மூலப்பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
நல வாரியத்திடமிருந்து ஓய்வூதியம் பெறாத சுமார் 1,30,000 கயிர் தொழிலாளர்களுக்கு தலா ரூ .1,000 வழங்கப்படும். இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கடந்த 6ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி, வெளியிட்ட அறிவிப்பில், 17 வகை நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ரூ.1,000 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களும் விநியோகிக்கப்படும் என்றும் கூறினார்.
கொரோனா.. மீனவர்களுக்கு சோதனை மேல் சோதனை.. மீன் பிடி தடைக்காலத்தை ரத்து செய்ய கோரிக்கை!
மீன் சந்தைகளுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மீனவர்கள் மீன்பிடிக்க கடும் கெடுபிடிகள் காட்டப்படுகிறது. எனவே, அவர்களுக்கும் நிதி உதவி தேவை. ஆனால் முதல்வர் அறிவிப்பில் மீனவர்களை மிஸ் செய்துவிட்டார். அதேநேரம், கேரள முதல்வர் மீனவர்களுக்கும், உதவித் தொகை அறிவித்துள்ளார். அதுவும் பிற தொழிலாளர்களை ஒப்பிட்டால் மீனவர்களுக்கு கூடுதல் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
மற்ற தொழிலாளர்களுக்கு ரூ.1000 உதவித் தொகை என்றால், மீனவர்களுக்கு ரூ.2000 வழங்குவதாக அறிவித்துள்ளார் பினராயி விஜயன். இந்த விஷயத்தில், தமிழக அரசு விரைவாக இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும் என்பதே மீனவர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.