வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்.. வெள்ளத்தால் வேதனையடைந்த பினராயி விஜயன்.. அதிரடி முடிவு
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டு கடுமையான வெள்ள பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், நீர் நிலைகளை ஒட்டி வீடுகள் கட்டுவதற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது கேரளா அரசு. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இனிமேல் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது என அறிவித்துள்ளது.
கடவுளின் தேசமான கேரளா இயற்கை எழில் சூழ்ந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒரு எல்லையாகவும், அரபிக்கடலை மறு எல்லையாகவும் பரவி விரிந்து அற்புதமாக காணப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாக பார்க்கப்படும் கேரளா கடந்த ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவாக பெருமழையை எதிர்க்கொண்டது. மேகவெடிப்புகள் பலமுறை நடந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்தன. சுமார் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
வெள்ளத்தால் கடும் பாதிப்பு
லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தங்கி இருந்தனர். வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள், மின்கம்பங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த சேதங்கள் சரிசெய்யப்பட்டு மெல்ல மெல்ல கேரளா பழைய நிலையை அடைந்து வந்தது.
சாலைகள் சீரழிந்தது
ஆனால் இந்த ஆண்டும் மிகப்பெரிய அளவில் மழை பெய்து மலப்புரம், வயநாடு உள்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது. மழை அளவு என்பது குறிப்பிட்ட சில நாளிலேயே ஒரேடியாக கொட்டி தீர்த்த காரணத்தால் சாலைகள் சீரழிந்தன. பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மரங்கள் பல இடங்களில் வேரோடு வீழ்ந்தன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
பாதிப்பு மிக அதிகம்
ஆறுகளில் மிகப்பெரிய அளவில் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. இதனால் ஆற்றக்கரையோரங்களில் வசித்த பலர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். சுமார் 70க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவால் உயிரிழந்துள்ளனர். 50 பேரை காணவில்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் சேதம் அதிகம் என்கிறார்கள் அங்கிருக்கிறவர்கள். இதற்கு முக்கிய காரணங்கள் நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியது. மற்றும் கட்டடங்கள் கட்டியது மற்றும் விவசாய நிலங்களை உருவாக்கியது போன்றவை காரணமாகும்.
பினராயி வேதனை
இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் கட்டடங்கள் கட்டுவதற்கு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளார். முதல்வர் பினராயி விஜயன் இது தொடர்பாக கூறுகையில் "இந்த உலகில் எல்லாவற்றையும் விட மனித உயிர்கள்தான் மிக முக்கியமானவை. நம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பல மக்கள் இறந்துள்ளார்கள். நம்மால் எதுவும் செய்யமுடியாமல் மண்ணில் சிக்கியுள்ள உடல்களைத் தோண்டும் பணியை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்
விளைவுகளை அனுபவிக்கிறோம்
நீர் நிலைகளின் ஓட்டத்தைத் தடுத்து வீடு கட்டியதன் விளைவைத் தான் தற்போது நாம் அனுபவித்து வருகிறோம். இந்த வருடம் எந்த அணையும் திறக்காமலேயே பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இனிமேல் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது.
உடனடியாக 10 ஆயிரம் நிவாரணம்
நிலச்சரிவில் தங்கள் வீட்டை இழந்து தற்போது முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவில் ஒரு தற்காலிக வீடு அமைத்துத்தரப்படும். மேலும், வேறு ஓர் இடத்தில் அரசு செலவில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். முகாம்களில் வாழும் அனைத்து குடும்பத்துக்கும் உடனடி நிவாரணமாக ரூ,10,000 வழங்கப்படும்" இவ்வாறு கூறியுள்ளார்.