சரியான விளையாட்டுப் பிள்ளையா இருக்காரே இந்த கேரள இளைஞர்!
திருமணத்திற்கு இடையே சென்று கால்பந்து விளையாடிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் திருமணத்திற்கு இடையே சென்று தனது அணிக்காக கால்பந்து விளையாடிய இளைஞரை மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பாராட்டியுள்ளார்.
திருமணத்தன்று கல்லூரி மற்றும் போட்டித் தேர்வுகளில் மணக் கோலத்திலேயே சென்று கலந்து கொண்டவர்கள் பற்றி நாம் கேள்விப் பட்டிருப்போம். சிலர் மணக்கோலத்தில் வாக்களிக்க சென்றதையும் நாம் ஊடகங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், திருமணத்தின் இடையே மணமகன் கால்பந்து விளையாடச் சென்ற சம்பவம் கேரள மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவின் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ரித்வான் என்ற இளைஞருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. கால்பந்து பிரியரான ரித்வான், ஃபிபா மங்சேரி என்னும் அணிக்காக விளையாடி வந்தார். தனது அணியின் தடுப்பாட்டக்காரராக அவர் இருந்தார்.
7 எஸ் லீக் போட்டி:
இந்நிலையில், அவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாளன்று அவரது அணி முக்கியமான ஒரு போட்டியில் பங்கேற்க வேண்டியதாயிற்று. மலப்புரத்தில் 7எஸ் லீக் கால்பந்தாட்ட போட்டி நடந்து வருகிறது. இந்த 7எஸ் லீக் போட்டி என்பது பொதுவாக 11 பேர் விளையாடும் கால்பந்தாட்ட போட்டி போல இல்லாமல் இதில் 7 பேர் மட்டுமே ஒரு அணியில் விளையாடுவார்கள்.
கேரளாவில் பிரபலம்:
கேரளாவில் இந்த போட்டி மிகவும் பிரபலம். இந்தப் போட்டியில் ரித்வானின் அணியும் விளையாட தேர்வானது. திருமண ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டதால், அவரால் திருமண தேதியை மாற்ற இயலவில்லை. ஆனால், அன்றைய தினம் அவர் கட்டாயம் விளையாட வேண்டிய கட்டாயமும் இருந்தது.
சின்ன பிரேக்:
இதனால் இரண்டில் ஒன்றை அவரால் தேர்ந்தெடுக்க இயலவில்லை. எனவே, இரண்டையையும் ஒரே நாளில் செய்து முடிப்பது என அவர் முடிவு செய்தார். அதன்படி, தன் திருமண நிகழ்வுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இடையில் ஐந்து நிமிடம் பிரேக் எடுத்த ரித்வான், தனது அணிக்காகச் சென்று விளையாடினார். அதுவரை மணமகள் அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
அணி வெற்றி:
அதிர்ஷ்டவசமாக அவரது அணியும் அந்த போட்டியில் வெற்றி பெற்றது. பின்னர் மீண்டும் தன் திருமண விழாவில் கலந்து கொள்ள திரும்பி விட்டார். மீண்டும் திருமண சடங்குகள் தொடர்ந்து நடைபெற்றது.
வைரலானது:
ரித்வானின் இந்த விளையாட்டு ஆர்வம் சமூகவலைதளங்களில் செய்தியாக பரவியது. தன் திருமண நிகழ்வு நடைபெறும் போது, இவ்வாறு அதில் பங்கேற்காமல் தன் அணிக்காக மாப்பிளை விளையாடிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
|
மத்திய அமைச்சர் பாராட்டு:
இதைக் கேள்விப்பட்ட மத்திய விளையாட்டு துறை அமைச்சரான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தனது டிவிட்டர் பக்கத்தில் ரித்வானைப் பாராட்டியுள்ளார். திருமணத்திற்கு இடையே கணவர் விளையாடச் செல்ல அனுமதித்த மணமகளுக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.