ஆட்சேபகரமான புகைப்படம்.. ரெஹானா பாத்திமாவுக்கு ஜாமீ்ன்.. பம்பைக்குள் நுழைய தடை!
ரெஹனா பாத்திமாவுக்கு கேரள ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமாவுக்கு தற்போது நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலை பற்றி அவதூறு பரப்பியதால் கைதான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய கேரள ஹைகோர்ட்டு பம்பையில் நுழையவும் தடை விதித்து உத்தரவிட்டது.
ரெஹானா பாத்திமா என்பவர் பிஎஸ்என்எல் ஊழியர் ஆவார். இவர் ஒரு மாடல் அழகியும் கூட. எல்லா வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று வழிபடலாம் என்ற தீர்ப்பினை அடுத்து, ரெஹானா பாத்திமாவும், கவிதா என்ற பெண் பத்திரிகையாளரும் கடந்த அக்டோபர் 19-ம் தேதி சபரிமலை சென்றனர்.
ஃபேஸ்புக் பதிவு
ஆனால் இருவரும் பக்தர்களின் எதிர்ப்பை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்பி அனுப்பப்பட்டனர். பின்னர், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்தை பதிவிட்டதாக இவர் மீது புகார் சொல்லப்பட்டது.
வழக்கு பதிவு
இது தொடர்பாக, பாஜகவை சேர்ந்த ராதாகிருஷ்ண மேனன் என்பவர் பத்தனம்திட்டா போலீசில் புகார் அளித்தார். இதனால் மத ரீதியிலான உணர்வுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் அவமரியாதை அளிப்பது தொடர்பான இந்திய தண்டனை சட்டம் 295ஏ பிரிவின்படி இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தள்ளுபடி செய்தது
கடந்த மாதம் 27-ந்தேதி போலீசார் இவரை கைது செய்து சிறையிலும் அடைத்தனர். இந்த நிலையில், கைதான ரெஹானா பாத்திமா பத்தினம் திட்டா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமீன் கோரினார். ஆனால் அவரது மனுவை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.
பம்பையில் நுழைய தடை
இதனால், ரெஹனா கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு செய்தார். அந்த மனுவை இன்று விசாரித்த கேரள ஹைகோர்ட், ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. அதே நேரம் அவர் பம்பையில் நுழையவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.