அருமை.. பள்ளிவாசலில் இந்து ஜோடிக்கு கல்யாணம்.. மசூதியில் முழங்கிய வேதம்.. சிலிர்க்கும் மனிதம்!
Recommended Video
திருவனந்தபுரம்: பள்ளி வாசலுக்குள் இந்து முறைப்படி இந்துக்களுக்கு திருமணம் நடந்துள்ள சம்பவம் நாட்டு மக்களை புல்லரிக்க வைத்து வருகிறது.. இஸ்லாமிய மாமனிதர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்து ஜோடிக்கு நடத்தி வைத்த இந்த நிகழ்வினை பாராட்ட வார்த்தையில்லை.. அதற்கு வரம்புமில்லை!
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது சேரவல்லி என்ற பகுதி. இங்கு வசித்து வருபவர் பிந்து.. கணவனை இழந்தவர்.. ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். பிந்துவின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது.. கூலிவேலை செய்துதான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலை.. பிள்ளைகளையும் படிக்க வைக்க முடியாமல் பிந்து சிரமப்பட்டார். பணம் இல்லாததால் அஞ்சுவும், அமிர்தாஞ்சலி என்ற இரு மகள்களின் பிளஸ் 2-வுடன் படிப்பையும் நிறுத்திவிட்டார்.
இப்போது அஞ்சுவுக்கு 26 வயதாகிவிட்டதால், திருமணம் செய்து வைக்க கடுமையான முயற்சித்து வந்தார் பிந்து.. ஒருவழியாக ஆலப்புழா கிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த சரத் என்ற இளைஞருடன் ஒரு மாதத்துக்கு முன்பு கல்யாணம் நிச்சயமானது.
நஜுமுதீன்
ஆனால் கல்யாணத்தை நடத்த பணம் இல்லை.. எங்கெங்கோ பிந்து அலைந்து திரிந்தும் அந்த பணத்தை புரட்ட முடியாமல் தவித்தார்.. அப்போதுதான் பிந்துவின் பக்கத்து வீட்டில் வசித்துவரும் நஜுமுதீன் ஒரு ஐடியா தந்தார்.. நஜுமுதீன் சேராவள்ளி முஸ்லிம் ஜமாத் செயலாளராக இருக்கிறார்.. பள்ளிவாசல் கமிட்டி அதிகாரிகளிடம் உதவி கேட்குமாறு நஜுமுதீன் சொல்லவும், பிந்துவும் அதன்படியே அந்த ஜமாத் கமிட்டிக்கு கடிதம் எழுதி உதவி கேட்டார். இதையடுத்து, அஞ்சுவின் கல்யாண செலவு முழுவதையும் தாங்களே ஏற்றுக் கொள்வதாக ஜமாத் கமிட்டியினர் முழு மனசுடன் ஒப்புக் கொண்டனர்.
கல்யாண பத்திரிகை
அது மட்டுமல்ல, அஞ்சுவிற்கு தங்கள் மசூதியிலேயே கல்யாணம் செய்து வைப்பது என முடிவு செய்யப்பட்டு, கல்யாண தேதியை ஜனவரி 19 என்றும் நாள் குறித்தனர்.. கல்யாண பத்திரிகையும் அச்சடிக்கப்பட்டு, பிந்துவுடன் சேர்ந்து கமிட்டி உறுப்பினர்களே அதனை ஊர் மக்களுக்கு வழங்கி, கல்யாணத்துக்கு வருமாறு அழைத்தனர்.
ஜமாத் கமிட்டி
நேற்றுதான் திருமணம்... ஊரே புடைசூட 100 வருட பாரம்பரியம் மிக்க பள்ளிவாசலுக்கு படையெடுத்து வந்தது.. மசூதியில் ஜமாத் கமிட்டியின் முன்னிலையில் கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், இஸ்லாமிய சமூகத்தினர் செய்துவைக்கும் கல்யாணம் என்றாலும், இது இந்து முறைப்படிதான் நடக்கும் என்று ஜமாத் கமிட்டியினர் ஏற்கனவே தீர்மானித்திருந்தனர். அதற்காகத்தான் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து அஞ்சுவுக்கு 10 பவுன் நகை, 2 லட்சம் ரூபாய் ரொக்கத்தை தந்து இந்த கல்யாணத்தை நடத்தினர்.
சிலிர்ப்பு
கிட்டத்தட்ட 1000 பேருக்கு வயிறார ஜமாத் கமிட்டியினர் சைவ சாப்பாடு போட்டனர்.. பள்ளிவாசலே நேற்றைய தினம் வித்தியாசமாக காணப்பட்டது.. மணமக்களை சுற்றி பட்டுப்புடவை அணிந்த பெண்களும் பர்தா அணிந்த பெண்களும் புடைசூழ நின்றிருந்தனர்... சாப்பாட்டு பந்தியில் ஜமாத் உறுப்பினர்களும், புரோகிதர்களும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து, இயல்பாக பேசிக் கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தனர்.. இந்த காட்சியை பார்க்கும்போதே நம்மையும் அறியால் ஒருவித சிலிர்ப்பு வந்து போனது.
வாடகை வீடு
இவ்வளவு சிறப்பாக திருமணத்தை நடத்தி வைத்தது குறித்து கேட்டதற்கு "பிந்து 3 குழந்தைகளை வைத்துகொண்டு ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தனியொருத்தியாக தன் பிள்ளைகளை வளர்க்க படாதபாடு பட்டு வருகிறார்.. அவரது கணவர் இறந்தபோதுகூட, இறுதி சடங்கு செய்யக்கூட பிந்துவிடம் பணம் இல்லை.. நாங்கள்தான் மற்ற உதவிகளை அப்போது செய்தோம்.. இப்போதும் குடும்ப சூழல் தெரிந்துதான் நாங்களே இந்த கல்யாணத்தையும் செய்து வைத்தோம்" என்று ஜமாத் உறுப்பினர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.
வாழ்த்துக்கள்
அத்துடன், ஜமாத் கமிட்டியினர் பிந்துவிற்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றி விட்டனர்.. அஞ்சு - சரத்தின் கல்யாணம் கேரளா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. இந்து மணமக்களின் திருமணத்தை விமரிசையாக நடத்தி முடித்திருக்கும் இஸ்லாமியர்களை நாடு முழுவதுமுள்ள மக்கள் பாராட்டி வருகிறார்கள். அதேபோல, இந்த சுப காரியத்தை அறிந்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
பினராயி விஜயன்
"கேரள மக்களின் ஒற்றுமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. சேரவல்லி முஸ்லிம் ஜமாத் மசூதி ஆஷா & சரத் ஆகியோரின் இந்து மத திருமணத்தை நடத்தி வைத்துள்ளது. ஆஷாவின் தாய் அவர்களிடம் உதவி கோரியதையடுத்து அந்த மசூதியானது திருமணத்திற்கு உதவி செய்துள்ளது. புதுமணத்தம்பதிகளுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும், மசூதி நிர்வாகத்தினருக்கும், சேரவல்லி மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம்
எவ்வளவுதான் இடர்பாடுகளையும், இன, மத ரீதியான பிளவுகளையும் ஒரு சில குரூரர்கள் கட்டவிழ்த்துவிட்டாலும்.. ஈரம் கசியும் மனசு இருக்கும்வரை.. சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும், நம்மிடமிருந்து யாராலும் ஒருபோதும் பிரித்து விட முடியாது என்பதைதான் இந்த பள்ளிவாசல் - இந்துமத திருமணம் நாட்டுக்கு பறைசாற்றி உள்ளது.