கேரளா இடைத்தேர்தல்: பால சட்டசபை தொகுதியை 54 ஆண்டுகளுக்குப் பின் கைப்பற்றிய இடதுசாரிகள்
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவின் பால சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கூட்டணி வேட்பாளர் மணி சி.கப்பன் வெற்றி பெற்றுள்ளார்.
கேரளாவின் பால சட்டசபை தொகுதியில் 1964-ம் ஆண்டு முதல் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் காங்கிரஸ்(எம்) தலஇவர் கே.எம். மணி. காங்கிரஸில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கினாலும் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார் கே.எம். மணி.
பலா சட்டசபை தொகுதியில் 13 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.எம். மணி. கேரளா அரசியல் வரலாற்றில் தேர்தலில் தோல்வியையே தழுவாத அரசியல் தலைவராக திகழ்ந்தவர் கே.எம். மணி.
மத்திய அமைச்சராக, கேரளாவின் பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்த கே.எம். மணி கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் பலா சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இத்தொகுதிக்கான தேர்தல் கடந்த 23-ந் தேதி நடைபெற்றது. இத்தொகுதியில் இடதுசாரிகள் வேட்பாளராக மணி சி. கப்பன், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக ஜோசே டோம் புலிக்குன்னெல், பாஜக வேட்பாளராக கோட்டயம் ஹரி ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டன. இதில் இடதுசாரி வேட்பாளர் மணி சி. கப்பன் 54,137 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் 51,194 வாக்குகள் பெற்றிருந்தார். இடதுசாரி வேட்பாளர் மணி சி. கப்பன் 2,943 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
பாஜக வேட்பாளராக போட்டியிட்ட கோட்டயம் ஹரி 18,044 வாக்குகள் பெற்றார். கடந்த 2016 தேர்தலில் இதே தொகுதியில் பாஜக 24,821 வாக்குகள் பெற்றிருந்தது. தற்போதைய இடைத்தேர்தலில் பாஜக 6,000 வாக்குகளை இழந்திருக்கிறது.
பலா தொகுதியில் கடந்த 54 ஆண்டுகாலம் காங்கிரஸ் கூட்டணியே ஆதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது இந்த ஆதிக்கத்தை இடதுசாரிகள் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.