கேரளாவில் தினமும் 10,000 முதல் 20,000 பேருக்கு தொற்று ஏற்படலாம்.. அமைச்சர் கேகே சைலஜா ஷாக் தகவல்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆகஸ்ட் இறுதியில் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தினமும் 10,000 முதல் 20,000 பேருக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அம்மாநில சுகாதார அமைச்சர் கேகே சைலஜா அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார்.
கொரோனாவை வெல்வதில் முன்னோடியாக பார்க்கப்பட்ட மாநிலம் என்றால் அது கேரளா தான். ஆனால் கொரோனாவை ஆரம்பத்தில் வெற்றிகரமாக கையாண்ட கேரளாவில் தொற்று இப்போது அதிகரித்துக் கொண்டே செல்வதை கட்டுப்படுத்த இயலவில்லை.
மற்ற மாநிலங்களைப் போலவே இப்போது கேரளாவில் கொரோனா தொற்று விகிதம் தினசரி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி ஜனவரி 30 ஆம் தேதி கேரள மாநிலத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டார். மருத்துவ மாணவிக்கு சீனாவின் வுஹானில் இருந்து கேரளாவிற்கு திரும்பியபோது கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதியானது.
கொரோனா.. 100க்கும் அதிகமான வேக்சின்களை உருவாக்க முடியும்.. அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை!
ஒரே நாளில் 1,564 தொற்றுகள்
இதனிடையே கேரளாவில் மே 5 ஆம் தேதி, மொத்தமே 500 பேருக்குத்தான் தொற்று இருந்தது. ஆனால் தொற்று பரவும் வேகம் அதன்பிறகு மீண்டும் அதிகரித்தது. இதனால் அந்த எண்ணிக்கை மே 27 க்குள் இரட்டிப்பாகியது. ஜூலை 4 ம் தேதி, கேரளாவில் 5,000 கேஸ்களாக உயர்ந்தது. ஜூலை 16 ஆம் தேதிக்குள் மாநிலம் 10,000 பேருக்கும், ஜூலை 28 க்குள் 20,000 க்கும் மேற்பட்டோருக்கும் தொற்று உறுதியானது. நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில், கேரளாவில் 1,564 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தற்போது கேரளாவில் மொத்த நோய்த்தொற்று எண்ணிக்கை 39,708 ஆக உயர்ந்துள்ளது.
20,000 பேருக்கு தொற்று
இந்நிலையில் கேரள சுகாதார அமைச்சர் கேகே சைலஜா மாநிலத்தில் தொற்று அதிகரிப்பது குறித்து சில அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார். இதன்படி ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதங்களில் தினசரி தொற்று எண்ணிக்கை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. தினமும் 10,000 முதல் 20,000 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக என்று கவலை தெரிவித்துள்ளார்.
கொரோனா கேஸ்கள் உயரும்
கேரள சுகாதார அமைச்சர் கேகே சைலஜா இதுபற்றி வீடியோவில் கூறுகையில், "ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். நாளொன்றுக்கு 10,000 முதல் 20,000 வரை தொற்று எண்ணிக்கை மாநிலத்தில் பதிவாக வாய்ப்பு உள்ளது. பாசிட்டிவ் தொற்று அதிகரித்தால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, தொற்று அதிகரிப்பதை கட்டுக்குள் வைக்க வேண்டும். அதற்காக மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
சைலஜா வேண்டுகோள்
வைரஸ் சங்கிலி தொடராக பரவாமல் இருக்க முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் சமூக விலகல் போன்ற சுகாதார நெறிமுறையை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், " இவ்வாறு அமைச்சர் ஷைலாஜா கூறினார்.