கேரள உள்ளாட்சி தேர்தல்:பாஜக தேசிய துணைத் தலைவர் அப்துல்லாகுட்டி சகோதரருக்கு மொத்தமே 20 வாக்குகள்தான்
திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தேசிய துணைத் தலைவர் அப்துல்லாகுட்டியின் சகோதரர் ஏ.பி. சாராஃபுதீன் வெறும் 20 ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்த அப்துல்லா குட்டி மோடியை புகழ்ந்ததால் முதலில் அந்த கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.எல்.ஏ.வாகவும் ஆனார்.
ஆனாலும் கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் மீண்டும் மோடியை புகழ்ந்தார். இதனையடுத்து காங்கிரஸில் இருந்தும் தூக்கியடிக்கப்பட்டார் அப்துல்லாகுட்டி. பின்னர் பாஜகவில் ஆதரவாளர்களுடன் அப்துல்லா குட்டி ஐக்கியமானார்.
கேரளாவில் பாஜகவுக்கு இடமே இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது: பினராயி விஜயன்
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் சூழலில் முஸ்லிம் வாக்குகளை அறுவடை செய்ய அப்துல்லா குட்டி அண்மையில் பாஜக தேசிய துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதனிடையே கேரள உள்ளாட்சித் தேர்தலில் அப்துல்லா குட்டியின் சகோதரர் ஏ.பி. சாராஃபுதீன், கண்ணூர் மாவட்டம் நாரத் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் ஏ.பி. சாராஃபுதீன் வெறும் 20 வாக்குகள் மட்டுமே பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் 677 வாக்குகள் பெற்று வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.